'இந்தாம்மா உன் பேரன்" என்று அம்மாவின் மடியில் போடலாமா? தம்பி பிள்ளைன்னு அந்த அம்மாள் சீராட்டிட்டு சாகட்டுமே பெண் ஒழுங்காகப் பெத்தது என்று இந்த அம்மா சீராட்டிப் பாராட்டட்டுமே.
அவள் பாரதம் படித்திருக்கிறாள். “இப்படியும் உண்டா? எப்படி இதை ஒத்துக்கொண்டார்கள்? என்று நினைத்துப் பார்த்திருக்கிறாள். அந்தப் பெண்களுக்கு ஏற்பட்ட துர்பாக்கியத்துக்கு விடிவு மோட்சம் இருந்தது. அவர்களையும் ஏசுகிறவர்கள் ஏசினார்கள். போற்றினவர்கள் போற்றினார்கள்.
இன்னும் கொஞ்ச நாழி மனசை இப்படி அலையவிட்டால் தானே போய் வலுவில் சாயிராமிடம் சரண் அடைந்து விடுவோம் என்று அவளுக்குத் தோன்றியது. அம்மாவுக்குத் தெரிந்தால் கன்னம் கன்னம் என்று அறைந்து கொள்வாள். 'அடி தட்டுவாணிச் சிறுக்கி! உனக்குப் பழைய புத்தி போகலைடி. பணக்காரனா, சாயிராம விட சின்னவனா புருஷன் கிடைச்சும் உன் ஈன புத்தி போகலையே .." என்று மோதிக்கொள்வாள்.
"தேடினியே அழகான மாப்பிள்ளையை. பிணத்தைக் கொண்டுபோய் உடைப்பிலே போடு அதுக்கு மேல் என்ன சொல்லமுடியும்?
நர்மதா வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். கிண்ணத்தில் கொஞ்சம் எண்ணெய் எடுத்துக்கொண்டு கோவிலுக்குக் கிளம்பினாள்.
நேராக அம்பாள் சன்னிதிக்குப் போனாள். எந்தக் கஷ்டமும். குறையும் அம்மாவிடம் சொன்னால் தீர்ந்து போகும். பளு குறைந்துவிடும். என்கிற நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்கிறதில்லையா? வெறும் அம்மாக்களே குழந்தைகளுக்குப் பக்க பலமாக இருக்கிறபோது ஜகன் மாதாவாக உலகத் துக்குத் தாயாக இருக்கிறவள் எப்படிப்பட்ட காருன்ய மூர்த்தியாக இருக்க வேண்டும்?
சன்னதியில் கூட்டமில்லை. ஒற்றை முல்லை சரம் கழுத்தில் துவள, தங்கப்பொட்டு மின்ன, அரக்குப் பாவாடை கட்டிக்கொண்டு பரம சாந்தமாக அவள் நின்று கொண்டிருந்தாள்.