அம்மா மனசு புரியாமல் கமலிக்காகப் பரிந்து கொண்டு பேசினாள் பார்வதி.
"வாயை மூடுடி! போதும். உன் சர்டிபிகேட்டை இங்கே யாரும் கேழ்க்கலே!..." என்று பெண்ணிடம் கோபமாகச் சீறி எரிந்து விழுந்தாள் காமாட்சி அம்மாள்.
அம்மாவின் கோபத்தையோ ஆத்திரத்தையோ பார்வதியாலேயே ஏற்க முடியவில்லை. அம்மா கமலியின் மேல் ஒரு காரணமும் இல்லாமல் அநாவசியமாகக் கோபப்படுகிறாள் என்றே பார்வதிக்குத் தோன்றியது.
பத்து பதினைந்து நாட்களிலேயே வாடியிருந்த பகுதி தவிர மறுபகுதியில் துளசி பொல்லென்று புதுத் தளிர்விட்டுப் பொலியத் தொடங்கிவிட்டது. பூமிநாதபுரத்திலிருந்து வந்த புதுப் பசுவும் வீட்டில் ஏற்கனவே எஞ்சியிருந்த கன்றுகளுமாகக் கூரையோ கீற்றோ இல்லாமல் ஆஸ்பெஸ்டாஸில் போடப்பட்டிருந்த புது மாட்டுக் கொட்டத்தை நிறைத்துக் கொண்டிருந்தன. ஆனாலும் ஊர் வம்பிலும் அரட்டைகளிலும் திண்ணைப் பேச்சிலும் இன்னும் கமலியின் தலைதான் உருண்டது. அவள் தான் வம்புக்கு இலக்காக இருந்தாள்.
"பரம வைதீகரான விசுவேசுவர சர்மா வீட்டிலே துளசிச் செடி பட்டுப் போனதற்கும் பசுமாடு எரிந்து போனதற்கும் கமலிதான் காரணம்" - என்று வெளியே இருப்பவர்கள் கண்மூடித்தனமாகப் பேசியது போதாதென்று வீட்டுக்குள்ளேயே காமாட்சியம்மாள் வெளிப்படையாகவும், சில சமயங்களில் ஜாடைமாடையாகவும் இப்படிப் பேசத் தொடங்கியிருந்தாள். சர்மாவிடம் அவள் சண்டை பிடித்துப் பார்த்தாள். அவர் அதற்கு அசையவில்லை. கமலியின் பவ்யம், பணிவு, மரியாதை, காரண காரியம் கேட்காமலே இந்து மதத்திலும், இந்தியக் கலாச்சாரத்திலும் உடனே விரைந்து கரையத் துடிக்கும் அவள் மனநிலை - எல்லாமே சர்மாவுக்குப் பிடித்திருந்தன. தங்களுக்கு ஒத்து வராததை எல்லாம் மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விட்டு எஞ்சியவற்றுக்கும் தட்டிக் கழிக்கும் நோக்குடன் காரண காரியம் கேட்டுக் கொண்டு தயங்கி நிற்கிற கலாசாரத்தை இழக்கத் தயாரான இந்தியர்களிடையே விஞ்ஞானத்திலும் ஞானத்திலும் மிக வளர்ந்த தேசத்திலிருந்து வந்திருக்கும் ஓர் இளம் பெண் நடந்து கொள்ளும் அடக்கமும் நளினமும் அவரை அவள் மேல் மரியாதை கொள்ளச் செய்திருந்தன.