அப்புறம் ஊர் சிரியாச் சிரிக்கும்" - என்று காமாட்சியம்மாள் சண்டைக்கு வரவே நட்டுவனாரும், பாகவதரும் வீட்டுக்கு வருவது நிறுத்தப்பட்டு அவர்கள் வீடுகளுக்குக் கமலி போவதென்று ஏற்பாடாயிற்று.
சர்மாவும், ரவியும் ஒருநாள் மாலை பேசிக்கொண்டே ஆற்றங்கரைக்குப் போகும்போது தற்செயலாக ஒரு விஷயம் சர்மாவிடமிருந்து ரவிக்குத் தெரியவந்தது. சர்மாவே முன் வந்து அதை அவனிடம் தெரிவித்தார்.
"இந்த ஊர் ரொம்பப் பொல்லாதது ரவி! திடீர்னு ஸ்ரீ மடத்திலேருந்து தந்தி குடுத்து என்னை வரச் சொல்லியிருந்தாளே, எதுக்குன்னு உனக்குத் தெரியுமா? நீயா இதுவரை என்கிட்டக் கேழ்க்கலைன்னாலும் நானா இப்போ சொல்றேன். நீயும் கமலியும் இங்கே வந்து தங்கியிருக்கிறதைப் பத்தியும் தேசிகாமணிக்கு மடத்துமனையை வாடகைக்கு விட்டிருக்கிறதைப் பத்தியும் மொட்டைக் கடிதாசும் தந்தியுமா எழுதிப் போட்டு என்னை உடனே ஸ்ரீமடம் பொறுப்பிலேருந்து வெளியேத்தணும்னு புகார் பண்ணியிருக்கா. நான் வெள்ளைக்காரியை வீட்டிலே தங்க வச்சுண்டு அவளுக்கு முட்டை மாமிசம்லாம் சமைச்சுப் போடறேனாம். நாஸ்திகனை மடத்துமனையிலே வாடகைக்கு வச்சு அக்கிரஹாரத்து மனுஷாளுக்குத் தர்ம சங்கடங்களை உண்டு பண்ணியிருக்கிறேனாம். எல்லாம் அந்தச் சீமாவையர் வேலை. ஸ்ரீ மடத்து நிலங்களையும் மனையையும் அவர் சொன்ன படி அவர் சொன்ன மனுசாளுக்கு விடலேங்கிற எரிச்சல்லே இத்தனையையும் அவர் பண்ணியிருக்கார். நல்ல வேளையா ஸ்ரீ மடம் ஹெட்டாபீஸ் மானேஜர் இதையொண்ணும் நம்பலை. ஆசார்யாளுக்கும் என்மேலே இருக்கிற அன்பும், அபிமானமும் கொஞ்சம்கூடக் குறையலே. நான் ஆசார்யாளைப் பார்க்கப் போயிருந்தப்போ யாரோ அர்ஜெண்டீனவிலேருந்து ஒரு லேடி நம்ம கமலி மாதிரின்னு வச்சுக்கோயேன்... ருக்வேதத்தைப் பத்திப் பெரியவா கிட்டப் பேசிண்டிருந்தா.
'மனசாட்சிக்குத் துரோகம் பண்ணாமே நியாயமாகவும் அந்தரங்க சுத்தியோடவும் ஸ்ரீ மடத்துக் காரியங்களை அவ்விடத்து ஆக்ஞைக்குக் கட்டுப்பட்டுப் பண்ணிண்டிருக்கேன். என்மேலே துளி சந்தேகமிருந்தாலும் உடனே நான் இதை விட்டுடறதுக்கும் தயாராயிருக்கேன். ஸ்ரீ மடம் சம்பந்தப்பட்ட கைங்கரியமாச்சேன்னுதான் இதுக்கு நான் தலைக்குடுத்துண்டு இருக்கேனே தவிர லாபம் பார்த்தோ பிரயாசைக்குப் பலன் எதிர்பார்த்தோ இதை நான் ஒத்துக்கல்லே' - என்று தீர்மானமா நான் எடுத்துச் சொன்னப்புறம் தான் நிர்வாகஸ்தருக்கும் ஆசார்யாளுக்கும் நிஜம்