புரிந்தது.
'உம்மமேலே பூர்ண நம்பிக்கையும் விசுவாசமும் இருக்கு. நீரே தொடர்ந்து ஸ்ரீமடத்துக் காரியங்களைக் கவனிக்கணும்கிறது தான் இவ்விடத்து ஆக்ஞை. ஏதோ இத்தனை பேர் எழுதியிருக்காளேன்னு கூப்பிட்டு விசாரிச்சதைத் தப்பா எடுத்துக்க வேண்டாம்'னா. அப்புறம்தான் எனக்கு நிம்மதியாச்சு. காமுவோட ஆசார்யாளைத் தரிசிக்க போனபோது நான் இந்த விஷயமெல்லாம் பேசலை. மறுபடி தனியாப் போய்ப் பேசினேனாக்கும். அதுனாலே உங்கம்மாவுக்குக் கூட இதெல்லாம் ஒண்ணும் தெரியாது. தெரிஞ்சா வேற வெனையே வேண்டாம். ஏற்கனவே கமலியைக் கரிச்சுக் கொட்டறவளுக்கு இன்னும் வேகம் வந்துடும்...."
இதைக் கேட்ட பின்புதான் ரவிக்கு ஓர் உண்மை புரிந்தது. தான் கமலியோடு வந்து தங்கியிருப்பதால் வீட்டுக்கும் அப்பாவுக்கும் புதிதாகத் தோன்றியிருக்கும் பிரச்னைகளை ஒவ்வொன்றாக அவன் உணர முடிந்தது.
"ஏன் தான் இப்படி வீண் வம்பளப்பிலே சந்தோஷப்படறாளோ? நம்ம மாதிரி மனுஷாளை விடத் தீவிரமான வெஜிடேரியன்ஸ் இப்போ ஐரோப்பிய சமூகத்திலேதான் புதுசா நெறைய உண்டாயிண்டிருக்கா. 'வெஜிடேரியனிஸம்' ஒரு பெரிய 'கல்ட்' ஆக அங்கே வளர்ந்துண்டிருக்கு. எங்க பழக்கத்துக்கப்புறம் கமலி ஏறக்குறையத் தீவிர வெஜிடேரியனாகவே மாறியாச்சு. வெஜிடேரியன் உணவு வகைகளுக்கு 'ஹெல்த் ஃபுட்ஸ்'னு பேர் குடுத்துக் கொண்டாடறவா உலகமெல்லாம் தோணிண்டிருக்கற காலம்ப்பா இது! நாகரிக வளர்ச்சியிலே எங்கெல்லாமோ ஒரு சுற்றுச் சுற்றி விட்டு 'வெஜிடேரியனிஸம்' கிற குழப்பமில்லாத எல்லைக்கு வந்து மறுபடி நிற்க மனிதர்கள் ஆசைப்படற காலத்திலே ஏன் தான் இந்த மாதிரி வம்பு பேசிச் சந்தோஷப்படறாளோ?" என்றான் ரவி.
"தப்பா நினைச்சுக்காதே. விஷயங்கள் உனக்குத் தெரிஞ்சிருக்கட்டும்னுதான் சொன்னேன். இதெல்லாம் பார்த்து நான் அசந்துடலே ரவி! ரொம்பத் தெளிவாயிருக்கேன். கமலியை உன்னைவிட நான் நன்னாப் புரிஞ்சிண்டிருக்கேன். முந்தாநாள் எங்கிட்ட ஸான்ஸ்கிரிட் படிக்கறப்போ, 'வாகர்த்தாவிவ'ங்கிற ரகுவம்ச ஸ்லோகத்தையும் 'ஜோதி ஸ்வரூபமாகிய சூரியனுக்குச் சிறிய தீபத்தினால் ஆரத்தி காட்டுகிற மாதிரியும், சந்திர காந்தக்கல்லானது மிகப்பெரிய சந்திரனுக்கே அர்க்கிய தீர்த்தம் விடுகிற மாதிரியும், சமுத்திரத்திற்கு அதன் நீரிலேயே ஒரு பகுதியை எடுத்து நீராட்டித் திருப்திப் படுத்துகிற மாதிரியும், நீ அளித்த