Flexi Classics தொடர்கதை - பரிமள கேசவன் - 02 - வை. மு. கோதைநாயகி அம்மாள்
எத்தன் கையில் சிக்கிய உத்தமி
மரத்தடியில், களைப்பு மேலீட்டினால் கிடந்த கோமதியைக் கண்ட பாலாவென்ற 7 வயதுச்சிறுமி தன்னை யறியாது புலம்பிக்கொண்டே தாயாரின் பக்கலில் உட்கார்ந்திருந்தாள். கேசவன் சென்று வெகு நேரமாகியும் வராமையினால் பாலாவின் கலக்கம் அதிகரித்தது. "அவன் எங்கு சென்றானோ! இன்னும் வரவில்லையே! "அம்மா! அம்மா! மயக்கம் தெளிந்ததா! கண்ணைத்திறந்து பாரேன். லீலா கத்துகிறாளே! அண்ணா கேசவனை இன்னும் காணவில்லையே!" என்று பரிதாபமாகக் கத்தினாள்.
சற்றுநேரங் கழித்து கோமதி சற்று களை தெளிந்து கண் விழித்தாள். "இன்னும் கேசவன் வரவில்லையே!" என்று மன வருத்தத்துடன் உட்கார்ந்திருக்கையில், அவ்வழியே சென்ற சிலர் "ஐயோ! சிறிய பையன் அநியாயமாய் மோட்டாரில் அகப்பட்டுக் கொண்டான்....என்ன அநியாய உலகம்! இதில் எத்தனை விபத்துக்கள் இந்தப் பாழும் மோட்டார் யமனால் நடக்கின்றன!" என்று சொல்லிக்கொண்டே செல்வதைக் கேட்ட கோமதி திடுக்கிட்டாள். "ஐயோ! என்னவோ பையன் மோட்டாரில் அகப்பட்டதாகச் சொல்கிறார்களே! ஒருவேளை நமது கேசவனாக விருப்பானோ! பாலா! அவர்களருகில் சென்று விசாரித்தால் தெரியும்" என்று கூறியவாறு அவர்களருகில் சென்று "ஐயா! எங்கேயோ பையன் மோட்டாரில் அகப்பட்டதாகச் சொன்னீர்களே! எங்கே? எந்தப் பையன்? என் மகன் வெளியில் சென்றான், இன்னும் வரவில்லை. அதனால் கேட்கிறேன்" என்று வெகு பரிதாபகரமாகக் கேட்டாள்.
இது கேட்ட வழிப் போக்கர்கள் "அம்மா! இந்த சென்னைப் பட்டினத்தில் தினம் இத்தகைய விபத்துக்கள் கணக்கின்றி நடக்கின்றன. இதற்கொரு கேள்வி முறையும் கிடையாது. வண்டி யோட்டிகளில்;சிலர் நன்றாகக் குடித்து விட்டுத் தலைகால் தெரியாமல் வண்டியை விட்டுக் கொண்டு செல்வதால் இத்தகைய கோர சம்பவங்கள் தினம் நடைபெறுகின்றன. உங்கள் மகனோ,யாரோ! நாங்கள் எதைக் கண்டோம். 10 வயதிருக்கலாம்; சிறு பையன் வண்டியில் அகப்பட்டுக் கொண்டான். பையன் அழகாக இருக்கிறான். சைனா பஜார் தெருவில் இந்த விபத்து நடந்தது. உடனே பையனை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு போனார்கள். அங்கு போய் விசாரித்துப் பாருங்கள்" என்று சொல்லிக்கொண்டே போய் விட்டார்கள்.
இது கேட்ட கோமதி, காலையில் ஒரு புதல்வனை சிறைக் கோட்டத்திற்கு அனுப்பியாயிற்று,