என்று கூறி கோமதிக்கும் பாலா, நீலா இருவருக்கும் சாப்பாடு செய்து வைத்தான். அரை மனதோடு உண்ட கோமதி "ஐயா! என் மகனெங்கே! என் குழந்தையைக் கூப்பிடுங்கள்." என்றாள்.
வந்த மனிதன்:-பெண்ணே! உன் மகனாவது அவனாவது? அதெல்லாம் இனி நினைக்காதே! உனக்கு இப்போது பேஷான நல்ல காலம் பிறந்துவிட்டதென்று கூறவேண்டும். நீயும் உன் மக்களிருவரும் கஞ்சிக்கின்றிப் பஞ்சாகப் பறக்கிறீர்களே! இந்த பஞ்சம் அறவே ஒழியும் காலம் வந்துவிட்டது. உனது மகன் எவ்விதமேனும் பிழைத்துக் கொள்வான். நீ உன் மக்களுடன் அதோ அவ்வறை-யிலிருக்கும் ஜனங்களுடன் கப்பலேறி வெளி நாட்டிற்குச் செல்லவேண்டும். அங்கு உனக்குச் சரியான கூலி கிடைக்கும். எத்தனையோ சௌகரியமாக வாழலாம்; கொஞ்ச காலம் சென்றபிறகு இந்த நாட்டிற்குத் திரும்பிவிடலாம்- என்று கூறினான்.
இந்த சுடு சரம் போன்ற கடுமையான மொழியைக் கேட்ட கோமதி இடியோசையைக் கேட்ட நாகம் போல நடுநடுக்கலுற்று, "ஆ! அடே பாதகா! உன் வஞ்சகத்தைக் காட்டி விட்டாயா! என்னை அயல் நாட்டிற்கு அனுப்புவதற்கோ நீ இத்தனை மோசமாக அழைத்து வந்தாய்! சண்டாளா! உன் மோச வலையில் சிக்கவோ என் விதி அமைந்தது. நான் அதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன். என்னுடைய குழந்தைகளுடன் பிச்சை எடுத்தேனும் இங்கு தான் ஜீவிப்பேன். நீ என்னைக் காப்பாற்றவேண்டாம். நாசகாலா!" எனத் திட்டியவாறு "பாலா! லீலா! வாருங்கள்" என்று இருவரையும் கையில் பிடித்துக்கொண்டு நடக்க வாரம்பிக்கையில், படீரென்று அவளிருந்த அறையின் கதவு பூட்டப்பட்டது. வேடன் கையிலகப்பட்ட மாடப் புறாவைப் போல இரு குழந்தைகளுடன் பரிதபித்த வண்ணம் அவள் நின்றுவிட்டாள். தன் விதியை எண்ணிப் புலம்பினாள்; கதறினாள். தான் எவ்விதம் தப்புவது என்பதறியாது தத்தளித்தவாறு மூர்ச்சையாகி விட்டாள்.
பிறகு கோமதி கண் திறந்து பார்க்கையில் தானும் தன் மக்களும் பல ஜனங்களுக்கு மத்தியிலிருப்பதாகத் தோன்றியது. நன்றாகக் கண் விழித்துப் பார்க்கையில் ஏதோ வண்டியில் நகருவது போலத் தோன்றியது கண்டு திடுக்கிட்டு அருகிலிருந்தவர்களை விசாரிக்கையில் "நாம் இப்போது கப்பவில் நடுக் கடலில் போய்க் கொண்டிருக்கிறோம்" என்றார்கள். அந்தோ! கோமதியின் மனக் கொதிப்பையும், அளவிட வியலாத துக்கத்தையும் கூறவேண்டுமா! நெருப்பிடை மெழுகென உருகினாள்; தத்தளித்தாள். "ஐயோ! சண்டாளா! எத்தனை பேர்களை இவ்விதம் ஏமாற்றியும், மோசம் செய்தும் அழைத்துச் செல்கிறீர்களோ! நேட்டாலில்