கஷ்டப்பட்டேன். ரப்பர் தோட்டத்தில் இம்சைப்பட்டேன். தேயிலைத் தோட்டத்தில் வதைப்பட்டேன்." என்று ஜனங்கள் சொல்லக் சொல்லக் கேட்டிருக்கிறோமே! ஹா! அந்த கஷ்டம் நமக்கே வந்துவிட்டது. ஏ பரம் பொருளே! ஒரு குழந்தையைக் கண்முன்பு கண்டவாறு பிரிந்தேன்; இன்னொரு குழந்தையைக் காணாது பிரிந்துவிட்டேனே! என் வயிறு செய்த பாவமா இது! ஐயோ! என்ன செய்வேன்? புருஷன் குடிகாரனாகவும்: வேசிக் கள்வனாகவும் இருப்பதனாலன்றோ என் கதியும் என் மக்களின் கதியும் இவ்விதமாயிற்று, ஏ பாழுங் குடியே! வேசிப் பேயே! என் கண்ணீர், உன்னை விடுமா! என் சாபம் உன்னைத் தாக்காது போகுமா?" என்று கண்ணீர் விட்டாள்.
அருகிலுள்ளோர் "ஏன் கத்துகின்றாய்! நாம் அங்கு சென்றால் வெகு சுகமாக வாழலாம். இரு பிள்ளைகளும் செத்துப் போய்விட்ட தென்று எண்ணிவிடு" என்று வெகுவாய்த் தேறுதல் கூறினார்கள். என்ன சொல்லியும் சமாதான மடையாத கோமதி அந்த கடலிலேயே குதித்துவிட எண்ணினாள், தன்னிரு பெண் மக்களையும் நோக்கிப் பேசாது அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டாள்.
கப்பல் துறைமுகத்தை அடைந்தது, கூலிகள் எல்லாம் இறக்கப்பட்டு அந்த முதலாளி வசம் ஒப்புவிக்கப் பட்டார்கள். அந்த தீவில் தனியே யகப்பட்டுக்கொண்ட கோமதியின் நிலைமை முன்னிலும் அதிகரித்து பலஹீனமாகிவிட்டது. அங்கு நடக்கும் கொடுமைகளும், இம்சைகளும் கூறத் திறமன்று, "கூலி நிரம்ப கிடைக்கும்" என்று ஏமார்ந்து வந்துவிட்ட கைதிகளெல்லாம் மிக்க விசனத்தை யடைந்து பரிதபிக்கலானார்கள் என்றால் கோமதியின் கதியைக் கூறவேண்டுமா! தன் விதி இது என்றும், மீள வழி இல்லாமையினாலும் தன் மக்களுடன் அங்கு உழைத்து ஒரு வருடத்தைக் கடத்தினாள். இத்தகைய விசனத்தின் பலனாக அவளது கருப்பம் குறை மாதத்தில் சேதமாகிவிட்டது.
கோமதி யாருடனும் பேசுவதில்லை. எந்த நேரமும் தன் கண்ணீரையும் இரு பெண்களையுமே தனக்குத் துணை கொண்டு வேலை பார்த்துவந்தாள். அங்கு வந்தவர்களில் சிலருக்குத் துன்பம். சிலருக்கு இன்பம்; இன்பப்படும் கோஷ்டியில் சேர்ந்தவர் அந்த இடத்து எஜமானுக்கும் மற்றோருக்கும் அடங்கித் தமது உயிரினும் இனிய கற்பைக் கொள்ளை கொடுத்த பெண்டீர்களே யாவர். அவர் ஆணைக்கும் ஏவலுக்கும் உட்பட்ட ஆள்களும் சிலர் துன்பமற்றிருந்தார்கள். அந்த வகையில் சேராத எத்தனையோ பெண்மணிகள் அவர்களால் கொடுமைபட்டுத் துன்பத்திற் கிலக்காகி இருந்தார்கள்.