போனாள். அங்கே படிக்கட்டில் உட்கார்ந்தபடி, முட்டிக்காலில் ஊன்றிய கைகளில் முகம் போட்டு, பக்கத்தில் இருந்த இருவர் மாறிமாறிச் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த துரை அவளைப் பார்த்து லேசாகத் தலையாட்டினான். ஆனால், பக்கத்தில் பாதி கிளாசோடு இருந்த அம்மைத் தழும்பன், அதட்டினான்:
"நீ ஆரோ, நாங்க ஆரோ? எதுக்கும்மே வந்தே, ரோசங்கெட்ட கயிதே?"
இன்னொரு வஸ்தாவான இன்னாசி, அவளைப் பார்த்து, எழப்போன அம்மைத் தழும்பனை அழுத்தி உட்கார வைத்தான். சரோசாவைப் பார்த்து ஒரு இடத்தைக் காட்டி மோவாயை ஆட்டி உட்காரச் சொன்னான். அவளும் தந்தையை அந்தத் தரையில் படுக்கப் போட்டபடி அவரது உடைகளைத் தளர்த்தி விட்டாள். துரை சாக்களிடம் புலம்பினான் :
"அப்போ, நானு ஆந்திராவுக்கு சரக்கு எடுக்கப் போகிற போதெல்லாம், இங்கேயே சல்சா நடந்ததுன்னு சொல்றே!. ஒரு வருஷமா நடக்கிற விவகாரத்த... நீ துரோகி, என்கிட்ட - இந்த தோஸ்துகிட்ட - சொல்லல. இன்னாய்யா பிரெண்டு நீ?"
"விட்டுத் தள்ளுப்பா... விஷயம் அதவிட முத்திட்டு. அண்ணாத்தே கார் அனுப்புறார். அக்கா ஜம்முனு புறப்படறாள். மட்டுமரியாத இல்லாம பூட்டு. சே, பொம்மனாட்டியா அது?"
சரோசா வாயைக் கொடுத்தாள்:
"யோவ் இன்னாசி, அந்தப் பொம்மனாட்டிய திட்டிறீயே, ஆனாங்காட்டி தொரண்ணன் கிட்டருந்து அவள அப்பிடி பிரிச்சு மயக்கின அண்ணாத்தைய பத்தி ஏம்ப்பா பேசமாட்டேங்கிற? ஒரு குடும்பத்தையே கலிஜி பண்ணிட்டாரே."
"இந்தாம்மே எயிந்திரு. எயிந்திரு. சரியான கபீரிச்சி நீ!''
துரை, இரண்டாவது தோஸ்தின் தோளையும் தட்டி அமைதிப் படுத்தினான். ஒரு கையால் அவன் தோளை அழுத்தியபடி முன்னால் இருந்த கிளாஸை இன்னொரு கையால் எடுத்து வாய்க்குள் தடதட வென்று விட்டான். பிறகு சற்றுத் தொலைவிலிருந்த இரண்டு கிளாஸ்களை எக்கிஎக்கி எடுத்தான். கண்ணாடி ஜாடியிலிருந்த மண் நிற திரவத்தை அவற்றில் முழுமையாக