"இங்கே எதுக்குமே வந்தே? என் புருஷன் ஒனிக்கி கள்ள ஆம்படையானா?"
"எக்கோவ், ஒன்ன மாதிரி என்னை நினைக்காதே."
“ நீ பெரிய ஒழுங்குதான்.”
“நானு அப்பிடி ஒண்ணும் சொல்லல..! தொட்டு இருக்கேன், கெட்டிருக்கேன். ஆனா, எனக்குன்னு ஒரு ஆம்புடையான் வந்துட்டா, அதுவும் துரை அண்ணன் மாதிரி நல்லவனா வந்துட்டா, நானு ஏரியா விட்டு ஏரியா போயி மேயமாட்டேன்.”
"ஏய், இதுக்குமேல் பேசினே, ஜோடு பிஞ்சிடும். 'அவரும்' ஒன்ன கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்காரு. அந்தப் பிள்ளாண்டானோட நீ ஆகபத்திரியில கொஞ்சினது, அவருக்குத் தெரியும். எப்பேர்ப்பட்ட மனுஷன்... அவர அவ்வளவு சீப்பா நினைச்சிட்டியா? இருக்கட்டும்... இருக்கட்டும். மொதல்ல இடத்தக் காலி பண்ணு.”
துரை, குடிவெறியோடு எழுந்தான். தர்ம பத்தினியின் தலை என்று நினைத்து ஒரு நாயின் தலையைப் பிடித்து இழுத்துக் கொண்டே சுத்தினான்:
"ஏம்மே! வீடுவிட்டு வீடு போறதுதான் போறே, நானு போட்ட தாலிய அறுத்துட்டுப் போறதுதானம்மே! சரோ, நீ உட்கார். மொதல்ல நீ வீட்டவிட்டு காலி பண்ணும்மே.”
தர்ம பத்தினி அதிகமாய் வெடித்தாள்:
"இந்தா பாருய்யா, இப்போ சொல்றதுதான். இந்த வீடு என் பேர்ல கீது. இருந்தா இரு.. போனா போ. என்னால தனியா சரக்குப் போட முடியும். இனிமே என்ன ஒதச்சே, அப்புறம் அவருகிட்ட ஒத தின்னுவே. போகணும்னா போயேன். என்னால சரக்குப் போட முடியும். பெரிய வஸ்தாதுன்னு நெனப்பா? மானங்கெட்ட பையா! நான் அண்ணாத்தய வச்சிட்டுத்தான் இருக்கேன்; இன்னாடா செய்வே பொட்டப் பையா?"