நிரப்பி, இன்னாசியிடம் கொடுத்து அவற்றை சரோசாவிடமும் அவள் நாயினாவிடமும் கொடுக்கச் சொன்னான். சரோசாவும் கொடுக்கப் பொறுக்காமல், அவற்றை வாங்கிக் கொண்டாள். ஒன்றை எடுத்து படுத்துக்கிடந்த நாயினாவின் தலையைத் தூக்கி, வாயை அகலப்படுத்தி ஒரு கிளாசை தலைகீழாகக் கவிழ்த்தாள். அது 'தடா' சட்டம் மாதிரி வேகமாகப் பாய்ந்தது. இன்னொரு கிளாசை எடுத்து, தனது வாயருகே கொண்டுபோனாள். ஒரு வாரமாய் கிடைக்காத அமிர்தம்... உள்ளே போனால் அது செய்யும் மாயாஜாலமே தனி. நிஜமே இல்லாத நிழல்களைக் காட்டும் மாய மருந்து; துக்கத்தைக் கரைத்து அதையே சந்தோஷமாகக் காட்டும் சர்வ வல்லப திரவம்.
சரோசா, பூனை கருவாட்டைப் பார்ப்பது போல், அரசியல்வாதி பதவியைப் பார்ப்பதுபோல், அதைப் பார்த்தாள். அந்தச் சமயத்தில் இளங்கோ அவள் முன்னால் வந்து நிற்பதுபோல் இருந்தது. அவளை முகம் சுழித்துப் பார்க்கிறான். நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தது போல், அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான். அவனது அலுவலக சகாக்கள் அவனை ஏளனமாகப் பார்த்தபடியே 'குடிகாரிய வச்சிட்டியே' என்று ஏசுவதைக் கேட்கிறாள். 'அடப்பாவி... படுபாவி... இளங்கோ! என்னோட சுகத்தைக் கெடுத்திட்டியே. இந்தக் குளிருல ஒரு நண்டுத் துண்டக் கடிச்சுக்கினு, ஒரு கிளாய பூட்டா எப்படி ஜோரா இருக்கும்! இன்னிக்கி மட்டும் கொஞ்சமா தவோண்டு போட்டுக்கிறேன்பா... நாளக்கி வாணாம்.'
சரோசா, மனதைத் திடப்படுத்திக் கொண்டாள். சாராய வாடை மூக்கில் கிக்-ஐ ஏற்படுத்தாமல் இருக்க அதைப் பொத்திக்கொண்டாள். அந்தக் கிளாசையே ஆசையோடு பார்த்த நாயினாவின் பக்கம் அதை நகர்த்திவிட்டாள். அவர் பதிலுக்கு அதை அவள் பக்கம் நகர்த்தியிருந்தால், வாய் வாய்க்காலாகி, அந்தத் திரவம் உள்ளுக்குள் உருண்டோடியிருக்கும். ஆனாலும், அவளோ ஒரு வைராக்கியத்தோடு, நாயினா குடித்த கிளாசைப் பார்த்து கண்ணை மூடிக் கொண்டாள்.
துரை, தனது சுமையில் அவள் சுவைக்காமல் போனதை உணரவில்லை. அந்த தோஸ்துகள் இருவரும் அவளை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அவர்கள் பார்வையில் இப்போது சிறிது மரியாதை தெரிந்தது. இந்தச் சமயத்தில் பாதி திறந்திருந்த பின்வாசல் கதவு சத்தம்போட்டது. துரை அண்ணனின் தர்ம பத்தினி அங்கே தாம்தூமாய் நின்றாள். தலையிலுள்ள பூக்கள் கசங்கியிருந்தன. நெற்றிப் பொட்டில் பாதியைக் காணவில்லை. கையில்லாத ஜாக்கெட். இரண்டு தோள்களும், 'ரொட்டி' சுடும்போது உப்புமே, அப்படி உப்பிநின்றன. சரோசாவை அதட்டலோடு கேட்டாள் :