"இது தேறாத கேஸ்ப்பா, ஒழுங்கா இருந்த இளங்கோவுக்கு ஏன்தான் இப்படி புத்தி கெட்டுப் போச்சோ?"
எச்சில் கிளாஸ்களோடு நின்ற சரோசா, அவர்களை எரிச்சலோடு பார்த்தாள். அவற்றை அவர்கள் மேலே வீசக்கூடிய அளவுக்கு அவள் கைகள் உயர்ந்தன. செம்மண் நிறத்தில் அடியும் தலையும் ஒரேமாதிரி ஆங்காரமாகப் பார்த்த அப்துல்லாவை நோக்கினாள். டைப்ரைட்டரைத் தட்டுவதற்குப் பதிலாக உதடுகளில் விரலை வைத்துத் தட்டிய வனஜாவைப் பார்த்தாள்.
அலுவலகத்திற்கு சம்பந்தம் இல்லாத ஏதோ ஒன்றை அவசர
அவசரமாக டைப் அடித்துக் கொண்டு பிடரியை மட்டும் பூவோடு சேர்த்துக் கட்டிய கனகாவைப் பார்த்தாள். நமுட்டுச் சிரிப்புச் சிரித்த அக்கௌண்டன்ட் ராமசாமியை தனித்துப் பார்த்தாள். பிறகு அடைக்கலம் தேடுவது போல், எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல், ஒரு டெலிபோனை குடைந்து கொண்டிருந்த தலைமை கிளார்க் எட்வர்ட்டைப் பார்த்தாள். எல்லாரும் எல்லாமும் எதிரித்தனமாகத் தோற்றம் காட்டின. ஆனாலும், அவள் தலையை தொங்கப் போட்டபடியே எச்சில் டம்ளர்களோடு குளியல் அறைக்குள் போனாள். பத்து நிமிடம் கழித்து கப்புகளிலிருந்து நீர் சொட்டச் சொட்ட உள்ளே வந்தாள். தலை தாழ்த்தியபடியே பிளாஸ்கைத் திறந்து காபி டம்ளர்களை நிரப்பினாள். இதுவரைக்கும் அந்த அலுவலகத்திற்கும், தனக்கும், குறிப்பாக அவளுக்கும் தனக்கும் ஒட்டோ உறவோ கிடையாது என்பதுபோல் வஸ்தாது நாற்காலியில் உட்கார்ந்திருந்த எட்வர்ட் இப்போது கத்தினார்
"ஒரு காபி கொடுக்கிறதுக்கு எவ்வளவு நாழிம்மா? இப்படியிருந்தா கட்டுபடியாகாது."
"ஏய் சரோ, பேரு மட்டும் பெரிசா வச்சா போதுமா? டம்ளருக்கு வெளியில கைய வச்சுப் பிடி. உள்ள விரல விட்டுக் கொண்டுவர்றியே, ஒன் டீயே வாணாம்.”
"இந்தாம்மா, காபி ஏன் ஐஸ் மாதிரி இருக்குது? ஒன் கை பட்டாலே எல்லாமே கோளாறாயிடும் போலிருக்கே. ஒன்ன மாதிரி காபிக்கும் சூடு சொரணை இல்லாமப் போச்சே."