சரோசா கடைசியாகப் பேசிய பியூன் அப்துல்லாவை கடைசியாகப் பார்ப்பதுபோல் கோபத்தோடு பார்த்தபோது, இன்னொரு கிரேடு டூ கிளார்க் மோகன் பொதுப்படையாக விளக்கமளித்தான் :
"இந்த பிளாஸ்க் சரியில்லாட்டா, அந்தப் பொண்ணு என்ன பண்ணும்? சர்க்கார் தலையின்னா எல்லா காண்ட்ராக்ட்காரன்களும் மொட்டையடிச்சிடுறான். எழுதாத பால்பாயிண்ட்; இங்க் உறிஞ்சுற பேப்பரு; முனை இல்லாத குண்டூசி. தட்டிக்கேக்க நாதியில்ல. எனக்கு எதுக்கு வம்பு. கமிஷன் வாங்கியிருக்காங்கன்னு சொன்னாலும் அதை நிரூபிக்க முடியாதே."
மோகன் தன்னை குறிவைப்பதைப் புரிந்துகொண்ட அக்கௌண்டன்ட் ராமசாமி அவனிடம் ஏற்பட்ட செல்லாக் கோபத்தை சரோசாவிடம் செலாவணியாக்கினார்:
"இந்தாம்மா, ஸ்டேஷனரி சாமான்களை வாங்கிக்கிட்டு வரச்சொன்னேனே... ஒன் காது செவிடா?"
"எங்க போயி வாங்கணும்னு தெரியல சார். ஒரு வாட்டி காட்டினா போதும்."
"ஒனக்கு எல்லாமே நான் கத்துக்குடுக்கணும்னு சொல்லுவ போலிருக்கே!"
அக்கௌண்டன்ட் ராமசாமியைப் பார்த்து, வனஜாவும், கனகாவும் செல்லமாகச் சிரித்தார்கள். தலைமை கிளார்க் மட்டும் அவர்களை லேசான கோபத்தோடு பார்த்து, பிறகு கனகாவின் முக அழகில் மயங்கியதுபோல் சிரித்தார்.
சரோசா ஆடையற்றுப் போனவள் போல் அவமானப்பட்டு நின்றாள். பல்லைக் கடித்துக் கோபத்தையும் கண்களில் தேங்கிய நீரையும் வெளிப்படுத்தாமல், அனைவருடைய மேஜைகளிலும் இருந்த எச்சில் கிளாஸ்களையும் எடுத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு டம்ளர் மீதும் அவள் கரம் நீண்டு அதை எடுப்பதற்கு அதிகமாகக் காலம் தாழ்த்தியது. சேரியில் பழகிய ஒவ்வொருவரும், அவள் மனதில் நிழலாடினார்கள். இப்படித்தான் ஒருதடவை ராசு சரக்கப் போட்டுட்டு "பிரா எங்கேம்மே வாங்கினேன்னு" கேட்டப்போ, துரையண்ணன் அவன போட்டுப் போட்டு ஒதச்சான். அப்புறம் செட்டுல இருந்தே தள்ளி வச்சான். அங்கே ஒருத்தன்தான் இப்படின்னா, இங்கே ஒட்டுமொத்தமாக அல்லாப் பசங்களும்