தண்ணியில்லா காடாய் பார்த்து...."
சரோசா, அதிகாரியின் அறையிலிருந்தும், அவர் செங்கோலோச்சும் செக்ஷனிலிருந்தும் வெளிப்பட்டு கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவமானப்பட்டு விட்டோமே என்பதைவிட, அவர்களை ஒன்றும் செய்யமுடியாமல் கையும், காலும் கட்டிப் போடப்பட்டிருக்கிறதே என்பதற்கு அதிகமாக வருந்தினாள். அந்தப் பக்கமாய் படியேறிக் கொண்டிருந்த இளங்கோவைப் பார்த்ததும், அவளுக்கு கவலைகள் கழன்று ஒரு உற்சாகம் ஏற்பட்டது. "சாரே.. சாரே...!” என்று சொன்னபடியே அவனைக் கூப்பிட்டாள். அவன் நடுப்படியில் நின்றபடி அவளை ஏறயிறங்கப் பார்த்தான். ஏதோ சொல்லப்போவது போல் உதடுகளைக் குவித்தான். பிறகு, அவள் அங்கே இல்லாததுபோல் அனுமானித்துக்கொண்டு மேலே சென்றான். சரோசா, புதைகுழிக்குள் மூழ்குகிறவள் போல் புதைந்தாள். அவனிடம் ருக்கு வீட்டில் நடந்த அனைத்தையும் காரண காரியங்களோடு சொல்ல வேண்டும் என்றுதான் அவள் துடித்தாள். அவனோ, அவளுடைய தோஸ்தாக நடந்துகொள்ளாமல், பாக்கியம்மாளின் மகனாகவே நடந்து கொள்கிறான். இல்லையானால், படிகளில் அப்படி நடந்து போயிருக்க மாட்டான்.
சரோசா வெளியே போய், லாண்டரித் துணிகளை வாங்கிக் கொண்டு மீண்டும் தனது செக்ஷனுக்குள் வந்தாள். அப்போது தலைமை கிளார்க் எட்வர்ட் முன்னால் நாற்பது வயது பெண் ஒருத்தி கண்ணீரும், கம்பலையுமாய் அழுது கொண்டிருந்தாள். பரட்டைத் தலை, பழுப்பேறிய முகம், காய்ப்புக்கள் கொண்ட கைகள், திக்கற்ற பார்வை, திக்குமுக்காடும் குரல். எட்வர்ட் அவளை விரட்டினார்:
"இங்க வந்து ஏம்மா ஒப்பாரி போடுறே? ஒன்கிட்ட எத்தனை தடவ சொல்லுறது? ஒன் புருஷன் செத்தா நான் என்ன செய்ய முடியும்? தாசில்தாரோட வாரிசு சர்ட்டிபிகேட்ட திருத்தாமல், பென்ஷனையோ, பிராவிடன்ட் பணத்தையோ தரமுடியாது. என்கிட்ட அழுகிறத, தாசில்தார் கிட்ட போய் அழு."
"தாசில்தார் கிட்ட போனேன் சார். பல தடவை காத்திருந்து ஒருதடவை பார்த்தேன். என்னோட மாமியார் அவரோட புருஷன் பென்ஷன வாங்கிக்கிட்டிருக்கார். அதோட அவருக்கு என் புருஷன் மாதிரி ஆறு பேர் இருக்காங்க. அதனால் அவரு வாரிசுகள்ல ஒருத்தரா ஆகுமுடியாதுன்னு படிச்சுப்படிச்சு சொன்னேன். ஆனால், அந்த ஆளு 'கொடுத்தது கொடுத்ததுதான், செய்யுறத செய்துக்கோ'ன்னு கத்துறாரு."