"அதுக்கு ஏம்மா, என் பிராணன வாங்குறே? வாரிசு சர்ட்டிபிகேட்டுல தாசில்தார் வில்லங்கம் செய்தால், நான் என்ன செய்ய முடியும்? அந்த சர்ட்டிபிகேட்ட திருத்தாத வரைக்கும் நாங்க ஒனக்கு ஒரு பைசா தர முடியாது!'
"அப்போ, பியூனா வேல பார்த்த என் புருஷன் செத்து இந்த ஒன்பது மாசமா வயது வந்த மகளோட, படிக்கிற பையனோட பட்டினி கிடக்குறேனே, அது மாதிரி கிடக்கணும்னு சொல்றீங்களா?"
தலைமை கிளார்க் எட்வர்ட், அவளுக்குப் பதில் சொல்லாமல் தன் வேலையைப் பார்த்தார். அந்தப் பாவிப் பெண்ணும், ஆறுதலுக்காக அங்குள்ள அத்தனை முகங்களையும் பார்த்தாள். ஒன்றுகூட ஒரு அனுதாபப் பார்வையை வீசவில்லை. இவ்வளவுக்கும் அவள் கணவன் அந்த செக்ஷனிலேயே கொத்தடிமை போல் வேலை பார்த்தவன். அனுதாபமாகப் பார்த்த சரோசாவிடம் ஒரு தோழியைக் கண்டுவிட்ட தோழமையில், அந்தப்பெண் “நீங்களே சொல்லுங்கம்மா புருஷன் இருக்கப்பவே, அரப்பட்டினி. அவரும் செத்து, அதோட அவரு சம்பளமும் செத்துப் போனால் எப்படிம்மா பொழப்ப ஓட்டுறது?” என்றாள். இதற்குள் அக்கௌண்டன்ட் ராமசாமி சரோசா மீது எரிந்துவிழுந்தார்.
“ஏய் சரோசா, பெரிய ஆபீசருமாதிரி கேட்டுகிட்டா நிக்கே? ஒன் வேலையை பாறேன். சரியான கழுத்தறுப்பு. இந்தாம்மா! ஒன் புருஷனோட வாரிசு சர்ட்டிபிகேட்டை தாசில்தார் திருத்தணும். இல்லாட்டி நீ தலைகீழா நின்னாலும் பணிக்கொடை பணமோ, சேமநிதியோ, பென்ஷனோ வராது. பேசாமப் போ. தலைக்கு மேல வேலையிருக்கு.''
அந்தப் பெண் தலையில் கை வைத்தபடியே வெளியேறினாள். வாசலைத் தாண்டியபோது , ஒரு விம்மல், வெடிச்சத்தம் போலக் கேட்டது. அவளை விக்கித்துப் பார்த்து நின்ற சரோசாவும், நிலைகுலைந்து போனாள்.
அன்று மாலைப் பொழுது முழுவதும் சரோசா மனதில் அந்த அப்பாவி விதவைப் பெண்ணே குடியிருந்தாள். இதற்குள், அனைவரும் போகத் துவங்கினார்கள். மாடிப்படிகளில் சந்தோஷமான பேச்சும், சரளமான காலடிச் சத்தங்களும் கேட்டன. அந்த செக்ஷனில் இருந்த பெண்