போடுறவள இழுத்துட்டு வா."
கரும்பு கான்ஸ்டபிள், சரோசாவை ஒரு கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து, அந்த அதிகார அறைக்குள் வந்ததும், அவள் முதுகில் வலது கையை ஊன்றி ஒரு தள்ளுத் தள்ளினார். இதனால் இன்ஸ்பெக்டர் மேல் முட்டி மோதப்போன சரோசா, தன்னை அறியாமலேயே மேஜையில் கையூன்றி, தன்னை சரிப்படுத்திக் கொண்டபோது, வெளியே ருக்கு, வீட்டுக்காரி முகங்களும், இந்த இரண்டிற்கும் இடையே கோவிந்து முகமும் உடம்புகளைக் காட்டாமல் மூன்று தலைகளையும், ஒரு உடம்பின் தலைகளாகக் காட்டின. சப்-இன்ஸ்பெக்டர், சரோசாவைப் பார்த்து கேலியும் கிண்டலுமாய் கேட்டபோது, இன்ஸ்பெக்டர் அவளைப் பார்க்காதது போல் எங்கேயோ பார்த்து புகைவிட்டார்.
"வாம்மா, வா. நீ அங்க சுற்றி, இங்க சுற்றி, எப்படியும் எங்கப் பக்கம் வருவேன்னு தெரியும். ஒன் மூஞ்சிக்கு கவருமென்ட் வேல வேற கேக்குதா? சொல்லுடி, துரைய நீ மட்டுமா கொன்னியா, இல்ல ஆட்கள வச்சிக் கொன்னியா? ஸார்! இவௗயெல்லாம் வெளியில விட்டுருக்கப்பிடாதுன்னு நான் அப்பவே சொன்னது, சரியாப் போச்சுது பாருங்கோ சார்."
சரோசா, எதுவும் பேசாமல், நின்று கொண்டே செத்துப் போனவள் போல் தோன்றினாள். இன்ஸ்பெக்டர், துண்டு சிகரெட்டை ஆஷ்டிரேயில் வைத்து அழுத்திவிட்டு, இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்தார். கோபம் வந்தால் அவர் செய்கிற முதல் காரியம் இதுதான். செயின்-ஸ்மோக்கிங். 'என்ன நினைச்சிருக்கான் இந்த சப்-இன்ஸ்பெக்டர்? அப்போ ஒரு பேச்சு, இப்போ ஒரு பேச்சு. பிரமோஷன்ல போகட்டும்... அதுக்காக பேச்சை மாத்துறதா? இவள விடும்படி சொன்னதே இவன்தானே?"
இன்ஸ்பெக்டருக்கு, அந்த சப்-இன்ஸ்பெக்டர் மேல் கோபம் கூடியதால், சரோசா மீதிருந்த கோபம் குறைந்தது. ஆனாலும் அவள் போட்ட அந்த பெட்டிஷனை நினைத்துக் கொண்டார். 'எவ்வளவு தைரியம் இருந்தா கமிஷனருக்கு கம்ப்ளைண்ட் எழுதுவாள்? அதுவும் ஏ.சி-யா பிரமோஷன் வரப்போற சமயத்துல. டெப்டி கமிஷனருக்கு ஒரு போன் போட்டு, அவர ‘விடுவிடு'ன்னு விடலாமா? ‘நீங்க அப்ப விடச் சொன்னீங்க... இப்போ அப்படிச் சொல்ல முடியுமா'ன்னு சவால் விடலாமா?
"இந்தாப்பா, இவள அந்த ரூமுக்குள்ள கொண்டு போ; விசாரிக்கிறபடி விசாரிச்சா