"தொரண்ணா, அய்யோ... தொரண்ணா..."
“ஏய், சும்மா இருடி..."
இன்ஸ்பெக்டர் அப்படிக் கத்திவிட்டு, முகம் குன்றிய அந்தம்மாவை, குற்ற உணர்வோடு பார்த்தார். நீண்டகாலப் பழக்கம் அப்படிப் பேச வைத்து விட்டது. அதைச் சரிக்கட்டும் வகையில், "இந்தாப்பா, ஏழு கப் டீ வாங்கிட்டு வா” என்று சத்தம் போட்டார். வெளியே நிற்கும் எந்த சிபாரிசுக்காரரின் காதுலயாவது விழுந்து அவன் வாங்கிக்கிட்டு வருவான் என்கிற நம்பிக்கை. பிறகு அவர், கதை சொல்வது போல் சொன்னார்:
"நான் நேரடியா விசாரிக்கலதான். எங்கம்மா இந்த செக்யூரிட்டி காலத்துல டைம் இருக்குது? ஊருக்கு இளைச்சவன் இன்ஸ்பெக்டர். சரி அந்தக் கதையை விடுங்க. இவரு கிரைம் சப்-இன்ஸ்பெக்டர். அவரை விசாரிக்கச் சொன்னேன். இவர் விசாரணையில் இந்த சரோசா கள்ளச் சாராயம் கடத்தினவள் என்கிறதும், இவளுக்கும் கொலையான துரைக்கும் ஏதோ தகராறு ஏற்பட்டு, இரண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்கன்னும் தெரிய வந்தது. ஒருநாள், நைட்ல இவள், நாயினா வெளியில கிடக்கிறானே ஒரு கிழவன், அவனோட, துரை வீட்டுக்குப் போயிருக்காள். அவனைக் கண்டபடி திட்டியிருக்காள். துரை பொண்டாட்டி இதைத் தட்டிக் கேட்டிருக்காள். உடனே இவள், அவளையும் பிடிபிடின்னு பிடிச்சிருக்காள். அந்தம்மா, கொஞ்சம் நாகரிகமானவள். கதவைப் பூட்டிக்கிட்டாள். அன்னிக்கி ராத்திரியே கொலை நடந்திருக்கு. சூழ்நிலை சாட்சியங்கள் இவளைத்தான் கொலைகாரின்னு சுட்டிக்காட்டுது."
இன்ஸ்பெக்டர், தான் பேசியது சரியா என்பதுபோல், சப்-இன்ஸ்பெக்டரை கண்ணசைத்துப் பார்த்தார். அவரும் தலையாட்டினார். அப்போது சிறிது நிசப்தம். அதைக் கலைத்து தேநீர் கோப்பைகளின் சலசலப்புக்களில், அந்த அம்மாவுடன் வந்த பெண்கள், சுவரில் சாய்ந்தபடி, சுவாசிப்பதில் மட்டுமே உயிரை வைத்திருப்பது போல் தோன்றிய சரோசாவையே பார்த்தார்கள். அந்த அம்மாவும் தம்மிடம் நீட்டப்பட்ட தேநீர் கோப்பையை வாங்கிக் கொண்டாள். ஆனால், வாயருகே கொண்டு போகவில்லை. சரோசா குற்றமற்றவள் என்று நம்பிக்கை ஏற்பட்டாலும், அவள் கண்ணீரும், கம்பலையுமாய், அவசர அவசரமாய் தன்னிடம் கூறிய தகவல்களை மீண்டும் சரிபார்க்க வேண்டும் போல் இருந்தது. சரோசாவையே இன்ஸ்பெக்டர்