சரியாயிடுவாள்."
சரோசாவை, அங்கிருந்து உடம்பையும், உள்ளத்தையும் விசாரிக்கிற ஒரு நீண்ட, நெடிய இருண்ட அறைக்குள் இட்டுப் போவதற்காக இரண்டு போலீஸ்காரர்கள் வந்தபோது, நான்கைந்து பெண்கள் வாசலில் சிறிது நேரம் நிதானித்து நின்றுவிட்டு, பிறகு உள்ளே வந்தார்கள். அவர்களில் ஒருத்தி கறுப்புக் கோட்டுப் போட்டிருந்தாள். சரோசாவிடம் 'குசலம்' விசாரிப்பதற்காக இருக்கையை விட்டு எழப்போன இன்ஸ்பெக்டர், இப்போது அங்கே வந்தவர்களுக்காக மரியாதையின் பொருட்டு, அப்படி எழுந்ததுபோல் ஒரு சிரிப்புச் சிரித்தபடியே, "வாங்கம்மா... வாங்க" என்று சொன்னபடியே உட்கார்ந்தார். பிறகு ஐந்தாறு விநாடி இடைவெளி விட்டுவிட்டு, "இந்தாப்பா, இவள வெளியில கொண்டு போய் நிறுத்து" என்றார். உடனே, அங்கு வந்த பெண்களில் தலைவி மாதிரியான அந்தம்மா, உட்காரப்போன நாற்காலியைப் பிடித்துக்கொண்டு நிதானமாகச் சொன்னார்:
"இந்த சரோசாவும் இங்கேயே நிற்கட்டும் சார்... நாங்க வந்ததே இவளுக்காகத்தான்."
இன்ஸ்பெக்டருக்கு நெஞ்சுக்குள் ஏதோ ஒரு இடத்தில் இடித்தது. அந்த வேகத்தில் ஒரு சிகரெட்டை எடுக்கப் போனார். பிறகு எடுத்ததைக் கீழே போட்டுவிட்டு எடுத்த எடுப்பிலேயே முந்திக் கொண்டார்:
"இந்த மாதிரி கொலைகாரிங்களுக்கு ஒங்கள மாதிரி ஆட்கள் வரப்படாதும்மா."
நாற்காலியில் லேசாய் சாய்ந்து உட்கார்ந்திருந்த அந்தம்மா, இன்ஸ்பெக்டரின் இருக்கைக்கு எதிரான நாற்காலியின் முனைக்குத் தன்னை நகர்த்திக் கொண்டு, அவரை, உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வை தாளமாட்டாது, அவர் அல்லாடினார். நியாயம் கேட்க வரும் வக்கீல்களைக்கூட அடித்துப் பிடித்து உள்ளே போட்டவர்தான். காவலில் இருப்பவர்களைப் பார்ப்பதற்காக நிராயுதபாணிகளாக - அதுவும் வெறுங்கையோடு வருகிற சொந்தக்காரர்களைக் கூட குற்றவாளிகளுக்கு உடந்தை என்று உள்ளே தள்ளியவர்தான். ஆனால், இந்தம்மாவை அப்படிச் செய்ய முடியாது. தொலைக்காட்சியை சாட்சியாக வைத்து, அமைச்சர்களை கதாநாயகர்களாக்கி, பெண்களுக்கு ஏதோ பாடுபடுவது போல பாவலா செய்து, அரசாங்க மானியத்தை வாங்கித் தின்னும் டைப் அல்ல இவர். மந்திரிகளையும், பெரிய மனிதர்களையும் கைக்குள் போட்டு, ஏற்கனவே குழந்தை பெற்று, கணவன்களோடு வாழும் பெண்களுக்கு