Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 34 - சு. சமுத்திரம்
அன்பு மனைவி பிரசவிக்கும் அறைக்கு உள்ளேயும் போக முடியாமல், அதே சமயம் வெளியேயும் நிற்க முடியாமல் தவிக்கும் கணவன்போல் இளங்கோ தவித்தான். அந்தக் காவல் நிலையத்திற்கு வந்து விட்டான். ஆபீஸ்காரர்களை மேலும் கொஞ்சம் திட்டிவிட்டு, அடித்துப் பிடித்து ஓடி வந்தான். சரோசாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது புரியவில்லை. ஆனால், ஏதாவது செய்தாக வேண்டும் என்று வேகமான வேகத்தில் வந்தவன், அந்தக் காவல் நிலையத்திற்கு அருகே அங்குமிங்குமாய் அல்லாடினான். அப்போது சரோசாவுடன், ஆட்டோவில் போலீஸ்காரர் சகிதமாய் வந்த முனியம்மா, அவனைப் பார்த்து லேசாய் சிரித்தபடி கையாட்டி விட்டுச் சென்றது, அவனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. சரோசாவும் அவனைப் பார்ப்பதுபோல் தெரிந்தது. ஆனால், பார்த்தாளா என்பது சந்தேகமே. எப்படியும் முனியம்மா வெளியே வந்ததும், அவளை விசாரித்துக் கொள்ளலாம் என்று உள்ளே போகாமலேயே நின்றான். சரோசாவை ஜாமீனில் எடுப்பதற்குத் தனக்குத் தெரிந்த வக்கீல்களை அவர்களின் திறமையின் அடிப்படையில் இல்லாமல், நட்பின் அடிப்படையில் மனதிற்குள் வரிசைப்படுத்திக் கொண்டான்.
இந்தச் சமயத்தில், பாமா ஒரு 'ஜே' பேருந்தில் இருந்து இறங்கினாள். அவள் முகம் தெளிவற்றுக் கிடந்தது. கன்னங்கள் லேசாய் குழிபட்டுக் கிடந்தன. ஆடை அக்கறையற்ற வகையில் தென்பட்டது. ஒற்றைச்சடையின் முடிவில் படர்ந்து விரிந்து மெல்லிய இரும்புக் கற்றைகள் போல் தோற்றம் காட்டும் முடி, இப்போது ஒரே ‘சடையாய்’, பூவற்று அங்குமிங்குமாய் பிசிறு தட்டி ஆடியது.
இருவரும் ஒருவரையொருவர் தற்செயலாக சந்தித்துக் கொண்டார்கள். பழக்க தோசத்தில் மெல்ல நெருங்கினார்கள். இறுதியில் பாமா பின்வாங்கினாள். அவன் சட்டையில் ஒரு பை கிழிந்து பனியனைக் காட்டிக் கொண்டிருப்பதை ஆச்சரியமாகப் பார்த்து விட்டு நடந்தாள். ஆனாலும், குறிப்பிட்ட இடத்தில் நின்றபடி கால்களை மட்டும் அங்குமிங்குமாய் தரையில் தேய்த்தாள். இப்போதுதான் ஒருவரையொருவர் முதன்முதலாக நேருக்கு நேராய் சந்தித்துக் கொள்கிறார்கள். அவனையே பார்த்த பாமா, முகத்தைக் குவித்து அங்குமிங்குமாய் தாழ்த்தி, தோள்பட்டைகளை ஈரப்படுத்தினாள். தந்தை ரமணனுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறும்போது இளங்கோவின் பார்வையைத் தவிர்த்தவள், இப்போது அதைத் தடுக்க முடியாமல் தடுமாறி நின்றாள். "நல்லா நாலு கேள்வி நாக்கைப் பிடுங்குற மாதிரி கேட்கணும். அவர் மட்டும் என்கிட்ட பேசட்டும், அப்போ தெரியும் சேதி” என்று தனக்குத்தானே