சொன்னதினால் ஒருவேளை வேலை கிடைக்காமல் போய்விடுமோ என்று கைகளை உதறிக்கொண்டே, "ஆனாலும், நானு சாவுறது வரைக்கும் விசுவாசமா இருப்பேம்மா...” என்றாள்.
அந்தம்மா, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்து, அவள் மட்டுமே அங்கே நிற்கிறாள் என்ற அனுமானத்துடன் அமைதியாகப் பேசினாள்:
"இந்தக் கால:ததுல படிச்சவங்கதான், ஏன் படிச்சோமுன்னு தலைகுனியணுமே தவிர, படிக்காத நீ தலைய நிமிர்த்த முடியாட்டாலும் அப்படியே வச்சுக்கலாம். சேரிக்காரி என்கிறதுக்காக நீ பெருமைப்படணும். காரணம், கூடிக்கிட்டே அடிச்சுக்கிறவங்க ஆபீசுக்காரங்க. அடிச்சிக்கிட்டே கூடிக்கிறவங்க சேரிக்காரங்க. சரி, அதவிடு...யாரு கண்டா, நம்ம மன்றத்துக்கு நீயே, ஒரு காலத்துல தலைவியாகலாம். எல்லாத்தையும் விட ஆயிரக்கணக்கான ஆட்களைக்கொண்ட ஒரு பெரிய குடும்பச் சங்கிலியில் நீ ஒரு வளையமா இருக்கப் போறே! இந்தக் கூட்டுக் குடும்பத்துல இனிமேல் நீயும் ஒருத்தி."
சரோசா, அந்தம்மாவை, அம்மாவாக நினைத்து மார்பில் சாயப்போனாள். இதற்குள், அவள் நாயினா, பேத்தியை இழுத்துப் பிடித்து தன் தோளில் போட்டுக் கொண்டார். இந்தச் சமயத்தில் வீட்டுக்காரம்மா, ஒரு பாயிண்டைக் கொண்டு வந்தாள்.
"இந்தப் போலீஸ்காரன் என்னை எப்படிம்மா கூட்டிக்கிட்டு வரலாம்? இந்தப் பாயிண்ட அந்தக் கறுப்புக் கோட்டுப் பொண்ணு ஏம்மா கேட்கல?”
"ஆயா, நீ எப்படி கரண்ட, சாப்பிடும்போது கட் பண்றியோ, அப்படி, அந்த போலீஸ்காரங்க செய்ததும் தப்புதான்."
பூக்கார ருக்குவை, வீட்டுக்காரம்மா கோபத்தோடு பார்த்துவிட்டு, பிறகு சிரித்தாள். இந்தச் சமயத்தில் போலீஸ் மாடி மேடையில் திருமலையப்பன் தோன்றினார். எல்லோரும் அவரை கையெடுத்துக் கும்பிட்டார்கள். அது அவருக்கு விடை கொடுப்பது போலவும், அதே சமயம் அவரை ஒருமித்து வணங்குவது போலவும் இருந்தது. அந்தக் கைகள் நிமிர்ந்தவை நிமிர்ந்தவைகளாக நின்றன.