சற்றுத் தொலைவில் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்த ருக்குமணியை கையாட்டி, தன் பக்கம் கூப்பிட்டாள். மெல்ல மெல்ல நடந்தவளை வேகவேகமாய் பிடித்திழுத்து, அவள் முதுகுக்கு சுவர்போல் ஆனாள். இளங்கோவைப் பார்த்துவிட்டு, அவன் அருகே இருக்கும் பாமாவையும் பார்த்துவிட்டு, அவர்கள் இருவரையும் கண்களால் சோடி சேர்த்துப் பார்த்த மகிழ்ச்சியில் லேசாய் தலையாட்டினாள். உடனே, அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொண்டவள்போல், பாமா, இளங்கோவை ஒரு தள்ளுத் தள்ளிவிட்டு சரோசாவின் பக்கம் போய் நின்று கொண்டாள்.
அந்தம்மா, தனது கைக் கடிகாரத்தைப் பார்த்தாள். புறப்படுவதற்கு ஆயத்தமாக கால்களை செருப்பு நுனிவரை நகர்த்திவிட்டு, பிறகு முக்கியமான ஒன்றைச் சொல்ல மறந்ததுபோல், செருப்புக்களை அகற்றிவிட்டு, சரோசாவைப் பார்த்துக் கேட்டாள் :
“ஒனக்கு ஆபீசுல வேலையும் போயிட்டுது. இனிமேல் நிச்சயம் சேர்க்க மாட்டாங்க... ஒரு மாசம் வரைக்கும் மட்டும்தான் கேஷுவலா இருந்த ஒனக்கு எங்களால் அந்த ஆபீசுல எதுவும் செய்யவும் முடியாது. அமைச்சர்கிட்ட சொன்னாலும் கடைசியில அதுல ஒரு கிளார்க்தான் முடிவெடுப்பான்."
ருக்கு, சரோசாவை தன் பக்கமாக இழுத்து வைத்துக்கொண்டு அந்த அம்மாவிடம் கெஞ்சுவதுபோல் பேசினாள்:
"ஆமாம்மா... அந்த ஆபீசுல செத்துப் போன ஒரு டிரைவரோட சம்சாரத்துக்கே ஒன்பது மாசம் ஆகியும் பாடாதிப் பசங்க பென்ஷன் தரலயாம். சரோசா அதுக்காக எவ்வளவு வருத்ததப்பட்டா தெரியுமா? அப்புறமா, நாயினாவோட தனி மரமா நிக்கிற இந்த தற்குறிக்கி, நீங்கதாம்மா, ஒரு வழி காட்டணும். அவளுக்கு யாருமே இல்லம்மா. திருந்தினவங்களுக்கு சரியான வழி கிடைக்காட்டி, அப்படித் திருத்துறது, பாதிக்கிணறு தாண்டினது மாதிரிம்மா. பல்லும் பூடும்; சொல்லும் பூடும். இல்லியா கோவிந்து மச்சான்?"
கோவிந்து மச்சானுக்கு இல்லியா என்பது 'மில்லியா' என்று கேட்டது; உடனே, அதற்காக அவன் மகிழ்ந்து போய் தலையாட்டினான். அந்தம்மா சற்று விலகிப் போய் நின்று கொண்டு தன்னுடன் வந்த பெண்களை அங்கே வரும்படி முகம் ஆட்டினாள். அந்தப் பெண்கள் அவள் அருகே போனார்கள். எல்லோரும் கும்மி அடிப்பது போல் வட்டமாய் நின்று கொண்டு