(Reading time: 12 - 23 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

முன்னிலையில் பேசச் சொல்லலாமா, அதற்கு அவர் சம்மதிப்பாரா என்று அந்தம்மாள் யோசித்தாள். இந்த யோசனை வேளையையே தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்வது என இன்ஸ்பெக்டர் உபதேசிதார்:

   

"பேசாமல் வரதட்சணைக் கொடுமை, விவாகரத்து, விதவைப் பிரச்சினை, பெண் தொழிலாளர் சம்பளம் இந்த மாதிரியான பிரச்சினைகளை மட்டும் எடுத்துக்கங்கோ மேடம். சேரிப் பொண்ணுங்கக் கிட்ட வராதீங்கோ. இவளுக ஒங்களையும் பார்ப்பாளுங்க; எங்களையும் பார்ப்பாளுங்க."

   

"நீங்க சொல்றது, 'ராமன் கெட்டதும் பெண்ணாலே, ராவணன் கெட்டதும் பெண்ணால' என்கிறது மாதிரி ஒரு தப்பான அணுகுமுறை.”

   

“அப்படியில்லம்மா! கேளுங்க, இவளப்பத்தி... ஒங்களவிட எங்களுக்கு நல்லாத் தெரியும். அசல் கேடி. அதனாலதான் சொல்லுறேன். நீங்க இப்போ எந்த அபலைப் பெண்ணுக்காவது உதவி செய்யணுமுன்னா அது துரை பெண்டாட்டிக்குத்தான். பாவம் படுத்த படுக்கையா கிடக்காள்."

   

இதற்குள் அந்தம்மாவுடன் வந்த பெண்கள் மத்தியில் லேசான சிரிப்பு. இன்ஸ்பெக்டர் அப்படிச் சொன்னதும் அவர்களில் ஒருத்தி “யாரோடயாம்” என்று தோழிகளிடம் கிசுகிசுப்பாய் சொல்லி விட்டாள். இந்தச் சிரிப்பு பெரிதானதும், அந்தம்மா அப்போதைய சூழலை நினைவுபடுத்துவது போல் அவர்களை எரிச்சலோடு பார்த்தாள். அந்தச் சிரிப்பு அண்ணாத்தேக்கு துணைபோன தன்னைப் பற்றிய சிரிப்பாய் இருக்கும் என்று உடனடியாக நினைத்துக்கொண்ட இன்ஸ்பெக்டருக்கு, இப்போது கோபம் வந்தது. அந்த அம்மாவிடம் வெட்டொன்று துண்டு இரண்டு என்ற தோரணையோடு பேசினார் :

   

"அப்போ போயிட்டு வாரீங்களா? செய்த கொலையை மறைக்கிறதுக்குத்தான், இந்த சரோசா, கமிஷனருக்கு பெட்டிஷன் போட்டிருக்காள். இவள் செட்டுல எவனோ ஒருத்தன், எவரையோ வச்சு எழுதிக் கொடுத்த புகார அனுப்பியிருக்காள். துரையை கொன்னது இவள்தான். அதுக்கு முன்னால, இளங்கோன்னு, ஒரு அப்பாவி இளைஞனை கிட்டத்தட்ட உயிர் போகிற அளவுக்கு அடித்துப் போட்டிருக்கிறாள். இதுவும் விசாரணையில தெரிய வந்திருக்கு. அதனால, இவள்தான் துரையை கொன்னாள் என்பதை யாராலயும் மறுக்க முடியாது."

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.