"உமக்குத் தகவல் தெரியணும்கிறதுக்காகத்தான் இதைச் சொன்னேன். உடனே கோபத்தோடு அசட்டுப் பிசட்டுன்னு ஆத்திரப்பட்டு அவனுக்கு லெட்டர் எழுதிப்பிடாதேயும். எழுதறதுன்னாக்கூட இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு இதெல்லாம் ரொம்ப நாசூக்காகவும் மனசு புண்படாமலும் எழுதணும். 'ஏண்டா போன இடத்தில் நீ பாட்டுக்கு யாரோ ஒரு பிரெஞ்சுப் பெண்ணைக் காதலிக்கிறியாமே?' -ன்னு எழுதாதீரும். 'நீ இந்த தடவை ஊருக்கு வரபோது உனக்குக் கல்யாணம் பண்ணிடலாம்னு நானும் உங்கம்மாவும் நினைக்கிறோம். பேப்பர்லே இந்த மாதிரி விளம்பரம் பண்ண உத்தேசித்திருக்கேன்'னு எழுதும். அதுக்கு அவன் என்ன பதில் எழுதறான்னு பார்க்கலாம்" என்பதாக வேணு மாமாதான் அந்த யோசனையைச் சொல்லியிருந்தார். அந்த யோசனைப்படி சர்மா ரவிக்கு இரண்டு வாரம் முன்பு எழுதியிருந்த கடிதத்துக்குத்தான் வியாழக்கிழமை காலையில் சுருக்கமாகவும், தீர்மானமாகவும், ஓரளவு கண்டிப்பாகவும் பாரிஸிலிருந்து பதில் வந்திருந்தது.
ரவியின் கடிதம் சற்றே பதற்றத்தோடும் அவசரத்தோடும் எழுதப்பட்டிருந்தது போல் தோன்றியது.
"மணமகள் தேவை விளம்பரம் அவசியமில்லை. அதை உடனே நிறுத்தவும். இங்கு சில மாதங்களுக்கு முன்பு வந்திருந்த வேணு மாமாவோ, அவர் பெண் வசந்தியோ என்னைப் பற்றிய விவரங்களை உங்களுக்குச் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் அந்த விவரங்களை எல்லாம் சொல்லியதன் பின் உங்களுக்கு எழுந்த சந்தேகத்தின் பேரில் நீங்கள் எழுதியிருந்தாலும் சரி, எந்த விவரமும் உங்களுக்குத் தெரியாமல் நீங்களாகவே எனக்கு எழுதியிருந்தாலும் சரி, என் பதில் இதுதான். இதில் மாறுதல் எதுவும் எதிர்பார்க்க வேண்டாம்.
நான் என் மனத்தை மிகவும் கவர்ந்துவிட்ட பிரெஞ்சு யுவதி 'கெமெலை'க் (Camille-என்ற அவள் பெயரை என் உச்சரிப்பு வசதிக்காகக் 'கமலி' - என்று இந்தியத் தன்மையூட்டி அழைக்கிறேன் நான்) காதலிக்கிறேன்; அவளும் என்னைக் காதலிக்கிறாள். நான் இன்றி அவள் வாழ முடியாது. அவளின்றி நான் வாழ முடியாது. இது நிச்சயம். அவளுடைய பெயரில் நான் செய்துள்ள மாற்றம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அவளும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்கவும் என் பெற்றோர்களாகிய உங்களையெல்லாம் காணவும் மிகவும் ஆவலாக