ரவி."
அருமைப் பிள்ளையாண்டான் ரவியின் இந்தக் கடிதத்தைத் திரும்பத் திரும்பப் பலமுறை படித்துவிட்டார் சர்மா. அவருடைய மனைவி காமாட்சி வேறு தொணதொணத்தாள்.
"ஏன்னா, நீங்க ஒரேயடியாகக் கவலையிலே மூழ்கறாப்பலே ரவி அப்படி என்னதான் எழுதியிருக்கான்? எனக்குந்தான் கொஞ்சம் படிச்சுச் சொல்லுங்கோளேன்; கேட்கிறேன்;"
"உனக்கு இப்போ ஒண்ணும் தெரிய வேண்டாம். நீ குய்யோ முறையோன்னு கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டிப்பிடுவே. விஷயம் இரசாபாசமாயிடும்."-
"நீங்க படிச்சுக் காட்டலேன்னா அதைப் படிச்சுத் தெரிஞ்சுக்க முடியாதுன்னு நினைச்சுக்க வேண்டாம். பாருவைப் படிக்கச் சொல்றேன். இல்லேன்னாச் சாயங்காலம் குமார் வந்தான்னா அவனைப் படிக்கச் சொல்லிக் கேட்டுப்பேன்."
-காமாட்சியம்மாள் இப்படிச் சொல்லவே சர்மா முன் ஜாக்கிரதையாக அந்தக் கடிதத்தை இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டிக் கொண்டார். இரும்புப் பெட்டிச் சாவி எப்போதும் அவர் இடுப்பை விட்டு இறங்காது. சாதாரணமாகவே தூண்டித் துருவி விசாரிக்கும் இயல்புள்ள காமாட்சியம்மாளிடம் 'உனக்கு இப்போ ஒண்ணும் தெரிய வேண்டாம். நீ குய்யோ முறையோன்னு கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டிப்பிடுவே... விஷயம் இரசாபாசமாயிடும்' என்று அவர் பதில் சொல்லிய விதமே அவள் ஆவலை அதிகப்படுத்திவிட்டிருக்கும். காமாட்சியம்மாளுக்குக் கொஞ்சம் காது மந்தம். வழக்கம் போல் 'உனக்கு இப்போ ஒண்ணும்...' என்று இரந்து உரத்த குரலில் தொடங்கிய சர்மா அந்த முதல் மூன்று சொற்களுக்குப் பின் ஒலியை மெதுவாக்கி மற்ற வார்த்தைகளை மென்று விழுங்கினாற் போல அமுக்கி விட்டார். ஆகவே உரையாடலின் பின் பகுதியில் அவர் என்ன சொன்னாரென்று நல்ல வேளையாகக் காமாட்சியம்மாளுக்குப் புரியவில்லை.
*****