அவர் போன சமயம் வேணு மாமா வீட்டில் இல்லை. வேணு மாமாவின் மகள் வசந்தி கூடத்தில் நாற்காலியில் சாய்ந்தபடி 'ஈவ்ஸ் வீக்லி' படித்துக் கொண்டிருந்தாள்.
சர்மாவைப் பார்த்ததும், "வாங்கோ மாமா! அப்பா வெளியிலே போயிருக்கார்... திரும்பற சமயம் தான்... உட்காருங்கோ" - என்று வரவேற்றாள் வசந்தி.
"அப்பா வர்றபோது வரட்டுமே... அதுவரை உங்கிட்டப் பேசறதுக்கே நெறைய விஷயம் இருக்கு அம்மா..."
"சித்தே இருங்கோ மாமா... உள்ளே அம்மாகிட்ட உங்களுக்குக் காபி கலக்கச் சொல்லிட்டு வந்துடறேன்..."
"காபியா? எனக்கெதுக்குமா; இப்பத்தானே சாப்பிட்டுட்டு வந்தேன்..."
"அதுனாலே என்ன! நான் சாப்பிடப் போறேன். எங்கூடச் சேர்ந்து இன்னொரு கப் சாப்பிடுங்கோன்னு நான் சொன்னாச் சாப்பிட மாட்டேளா என்ன?"
"பேஷா, நீ வற்புறுத்தினா எப்படி நான் மாட்டேங்கறது?"-
வசந்தி உள்ளே சமையலறைக்குப் போய்விட்டு வந்தாள். வேணு மாமாவின் மனைவி அதாவது வசந்தியின் அம்மா - சர்மாவுக்கு முன்னால் வந்து நின்று பேச மாட்டாள். சில பெண்டுகள் சில ஆண்களுக்கு முன்னால் நேருக்கு நேர் நின்று பேசுவதில்லை என்பது கிராமங்களில் நீடித்த மரியாதை வழக்கமாக இன்னும் இருந்து வருகிறது. படிப்பு, பழக்க வழக்கம் எல்லாவற்றிலும் வசந்திக்கும் அவள் அம்மாவுக்கும் நடுவிலேயே ஒரு தலைமுறையின் பெரிய வித்தியாசங்கள் இடைவெளிவிட்டுத் தெரிந்தன. வேணுமாமாவின் சம்சாரம் சர்மாவுக்கு முன்னால் வருவதையோ எதிர் நின்று பேசுவதையோ கூடத் தவிர்த்தாள். வேணுமாமாவின் பெண் வசந்தியோ, சர்மாவுக்கு முன் நாற்காலியில் அமர்ந்து எந்த விஷயத்தையும் பற்றி அவரோடு நேருக்கு நேர் விவாதிக்கவும், சிரித்துப் பேசவும் தயாராக இருந்தாள்.
"என்ன மாமா? ரவிகிட்டே இருந்து உங்க லெட்டருக்குப் பதில் வந்துதா?"