இருக்கிறாள். இம்முறை நான் வரும்போது கமலியையும் அங்கு அழைத்து வருவதாக முடிவு செய்திருக்கிறேன்.
மகாலட்சுமி போன்ற அழகும், புன்னகை மாறாத துறுதுறுவென்ற முகக் களையும், மாற்றுக் குறையாத சொக்கத் தங்கம் போன்ற நிறமும் உள்ள மருமகளை அவளிடம் அழைத்து வருவதாகத் தயவு செய்து அம்மாவிடம் சொல்லுங்கள். கமலிக்கும் இந்தியத் தாய்மார்கள், இளம் பெண்கள் இவர்களோடெல்லாம் பழகிப் பல விஷயங்களை அறிய வேண்டும் என்பதில் கொள்ளை ஆசை. அம்மாவோ, நீங்களோ, கமலியிடம், எந்தவிதமான கோபதாபங்களையோ மனஸ்தாபங்களையோ காண்பிக்கக் கூடாது. இது என்னுடைய வேண்டுகோள்.
சின்ன வயதில் நீங்கள் எனக்குக் கற்பித்த சமஸ்கிருத காவியங்களில் 'காந்தர்வ விவாகம்' - என்பதற்கு விளக்கம் சொல்லும்போது, "கொடுப்பவர்களும் ஏற்பவர்களும் இன்றிச் சகல இலட்சணமும் பொருந்திய ஓர் இளைஞனும் இளம் பெண்ணும் தமக்குள் தாமே சந்தித்து மனமும் உடம்பும் இணைவது" என்று விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள். விவாகங்களில் உயர்ந்த தரத்து விவாகம் அதுதான் என்பதையும் விளக்கியிருக்கிறீர்கள். அதை இப்போது உங்களுக்கு ஞாபகப்படுத்த மட்டும் விரும்புகிறேன்.
'உங்கள் மன உணர்ச்சிகள் எப்படி இருக்கும்? அம்மா என்ன நினைப்பாள்?' - என்றெல்லாம் என்னால் இங்கிருந்தே அநுமானம் செய்து கொள்ள முடிகிறது.
குமார் நன்றாகப் படிக்கிறானா? பாருவுக்கு என் பிரியத்தைச் சொல்லவும். இருவரிடமும் அவர்களுடைய பிரெஞ்சு மன்னி அவர்களைச் சந்திக்க மிகவும் ஆவலாக இருக்கிறாள் என்று சொல்லவும்.
வேணு மாமாவையும் அவர் பெண் வசந்தியையும் கேட்டதாகச் சொல்லுங்கள். வசந்தி இங்கு வந்திருந்த போது கமலியோடு நன்றாகப் பழகினாள். கமலிக்கு அவளையும் அவளுக்குக் கமலியையும் ரொம்பப் பிடித்துப் போயிற்று.
மாமாவிடமும், வசதியிடமும், நாங்கள் வருகிற தகவலைச் சொல்லவும்.
உங்கள் பிரியமுள்ள