இல்லை.
பிரான்ஸில் உள்ள பெரிய பல்கலைக் கழகத்துக்காக 'புரொஃபஸர் ஆஃப் இண்டியன் ஸ்டடீஸ் - அண்ட் ஓரியண்டல் லாங்வேஜஸ் டிபார்ட்மெண்ட்' பதவிக்கு மனுக்களைக் கோரி இந்தியன் கவுன்ஸில் ஃபார் கல்ச்சுரல் ரிலேஷன்ஸ் விளம்பரம் செய்திருந்தது. பி.எச்.டி. தவிர தமிழ், சமஸ்கிருந்தம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமையோடு பிரஞ்சு மொழிப் பயிற்சியில் டிப்ளோமாவும் தகுதிகளாகக் கோரிக் குறிப்பிடப்பட்டிருந்தன.
ரவியிடம் இந்த எல்லாத் தகுதிகளும் இருந்தன. ஒரு வருஷத்துக்கும் குறைவாகச் சென்னையில் ஒரு கல்லூரியில் வேலை பார்த்தபோது மாலை நேரங்களில் சும்மா இருக்க வேண்டாமே என்று 'அல்லயான்ஸ் பிரான்ஸேயில்' சேர்ந்து வாங்கிய பிரெஞ்சு டிப்ளோமாவும் பயன்பட்டது இப்போது.
அந்த உத்தியோகத்திற்காக டில்லியில் நடந்த இண்டர்வ்யூவுக்கு மொத்தம் ஆறுபேர் வந்திருந்தார்கள். அதில் இருவர் அதிகம் வயது மூத்தவர்கள் என்பதால் தகுதி இழந்தனர். வேறு இருவருக்குப் பிரெஞ்சு மொழி ஞானம் சரியாயில்லை. இன்னொருவருக்குச் சமஸ்கிருதம் போதுமான அளவு தெரியவில்லை. இண்டர்வ்யூ நடத்தியவர்களுக்கு எல்லா வகையிலும் - கம்பீரமான அழகிய தோற்றம் உட்படத் - திருப்தியளித்தது ரவிதான். அதனால் ரவிக்கு அந்தப் பதவி கிடைத்தது.
முதலில் அவன் பெற்றோர் தயங்கினாலும், அந்தப் பதவிக்காக இந்தியாவில் கனவிலும் எதிர்பார்க்க முடியாத சம்பளத் தொகையைக் கேள்விப்பட்டதும் சம்மதித்தார்கள். இதுதான் வெளிநாட்டில் ரவிக்கு ஓர் உத்தியோகம் கிடைத்த வரலாறு.
இன்று புதிதாக எழுந்துள்ள பிரச்னையையும் இந்தப் பழைய வரலாற்றையும் சேர்ந்தே இப்போது மறுபடி நினைத்தார் சர்மா. ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் வேணு மாமாவையும் அவர் பெண் வசந்தியையும் கலந்தாலோசிக்கலாம் என்று சர்மாவுக்குத் தோன்றியது.
ரவியின் கடிதத்தை எடுத்துக் கொண்டு வடக்குத் தெருவில் இருந்த வேணு மாமாவின் வீட்டுக்குச் சென்றார் சர்மா.