சங்கரமங்கலம் அக்கிரகாரம் மற்ற எல்லா அக்கிரகாரங்களையும் போல வம்பு தும்புகளும், புறம் பேசுதலும், பொருளற்ற விரோதங்களும், பயனற்ற முரண்டுகளும் நிறைந்ததுதான். எல்லாவிதமான மனிதர்களும் அங்கு இருந்தார்கள். புதுமையை அங்கீகரிக்காத வறட்டுப் பிடிவாதம், சாதி சம்பிரதாய ஆசார அநுஷ்டானங்களுக்கு முக்கியத்துவமளிக்கும் பழைய வைதிகர்களின் பிடிப்பு, படித்த இளைஞர்கள் உத்தியோகங்களுக்காகக் கிராமத்தைவிட்டு வெளியேறுதல், கட்சி கட்டுதல், ஒற்றுமையின்மை, வயல் வரப்புச் சண்டை, வைக்கோல் போருக்குத் தீ வைத்தல் சகஜமாக அந்தக் கிராமத்திலும் இருந்தன.
இன்றைய இந்தியக் கிராமம் என்பது முழுவதும் பழமையான நன்மைகள் நிறைந்ததுமில்லை. முழுவதும் புதுமையான வளர்ச்சிகள் நிறைந்ததுமில்லை. பழைமையை விடமுடியாமல், புதுமையைப் புறக்கணிக்கவும் முடியாமல், சடங்கு சம்பிரதாயங்களை தவிர்க்கவும் முடியாமல், விஞ்ஞான விவேக வளர்ச்சிகளை விட்டுவிடவும் ஏற்கவும் இயலாமல் தவிக்கும் ஓர் இரண்டுங்கெட்டான் நிலையில் அது இருந்தது. தர்மம், அதர்மம், நியாயம், அநியாயம், பணத்தாசை, பொறாமை, திருட்டு, நட்பு, விரோதம், அசூயை, விபூதி, துளசி, சீட்டாட்டம், புகையிலை, பொடி, வேதம், அத்யாயனம், வறுமை, செல்வம் என்று இவையெல்லாம் எப்படி ஒன்றோடொன்று ஒட்டாதவையோ அப்படியே இந்தியக் கிராமங்களின் நிலையும் ஒன்றோடென்று ஒட்டாமல் இருந்தது.
அதிலும் ஜீவநதி ஒன்று பாய்கிற தீரவாசத்துப் பிரதேசமாக இருந்துவிட்டாலோ இந்தப் பிரச்னைகள் இன்னும் அதிகம். சங்கரமங்கலம் தீரவாசத்தில் இருந்த வளமான கிராமம். அங்கே பாயும் அகஸ்திய நதி வற்றி மணல் தெரிந்தது என்ற பேச்சுக்கே இடமில்லை. பொன் விளையும் பூமி என்பார்களே அப்படிப்பட்ட கிராமம். கிராமத்திலிருந்து வெளியேறி பெரிய உத்தியோக அந்தஸ்தில் இருக்கிறவர்களின் பட்டியலில் முதலிடம் யுனெஸ்கோவில் உள்ள வேணு மாமாவின் பிள்ளை சுரேஷுக்குத்தான். தொழில் துறையில், வியாபாரத்தில் சர்க்கார் உத்தியோகங்களில், கம்பெனி நிர்வாகப் பதவிகளில் அந்தக் கிராமத்திலிருந்து சென்றவர்கள் பலர் இருந்தாலும் சுரேஷுக்கு அடுத்த இடம் என்னவோ சர்மாவின் பிள்ளை ரவிக்குத்தான் தரப்பட்டிருந்தது.
நாலைந்து ஆண்டுகளுக்கு முன் இப்போது பாரிஸில் ரவி பார்க்கும் இந்த உத்தியோகத்திற்காக அவன் விண்ணப்பித்த போது தனக்கு இது கிடைக்கும் என்ற நம்பிக்கையே அவனுக்கு