"வந்திருக்கும்மா! அது விஷயமாத்தான் உங்கிட்டவும் உங்கப்பாகிட்டவும் பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்..."
"என்ன எழுதியிருக்கான் மாமா?"
ரவியின் கடிதத்தை அப்படியே எடுத்து வசந்தியிடம் நீட்டினார் சர்மா.
வசந்தி கடிதத்தைப் படித்துவிட்டு அவரிடம் திருப்பிக் கொடுத்தாள். 'கமலி ரொம்பத் தங்கமான பெண்' - என்ற பாராட்டுரை வசந்தியின் வாய் நுனிவரை வந்துவிட்டது. சர்மா எப்படி, என்ன மனநிலையோடு வந்திருக்கிறாரோ என்றெண்ணி அந்த வார்த்தைகளை அப்போது அவசரப்பட்டுச் சொல்லிவிடாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் அவள்.
உள்ளேயிருந்து வசந்தியின் அம்மா அவளை அழைக்கும் குரல் கேட்டது. வசந்தி போய் இரண்டு டவரா டம்ளர்களில் காபியை எடுத்துக்கொண்டு வந்தாள்.
காபி குடித்து முடிக்கிறவரை இருவரும் மேற்கொண்டு எதுவும் பேசிக் கொள்ளவில்லை. காபி குடித்து முடித்ததும் சர்மாதான் முதலில் ஆரம்பித்தார்.
"இப்படி நடந்துடும்னு நான் சொப்பனத்துலேகூட நினைச்சுப் பார்த்ததில்லேம்மா!"
"நீங்க வருத்தப்படற அளவுக்குத் தப்பா ஒண்ணும் இப்போ நடந்துடலியே மாமா?"
"இன்னும் என்ன நடக்கணும்கிரே?"
"சந்தோஷமாப் பிள்ளையையும் மாட்டுப் பொண்ணையும் வரச்சொல்லிப் பதில் எழுதுங்கோ மாமா! என்னையும் அப்பாவையும் பொறுத்த மட்டிலே நாங்க நேர்லே அங்கே போயிருந்தப்பவே எல்லாம் உறுதியாத் தெரிஞ்சு போச்சு. நாங்க வந்து சொன்னதுலே உங்களுக்குச் சந்தேகம் இருக்கப்படாதுங்கிறதுக்காகத்தான் நாசூக்காகவும் நாகரிகமாகவும் 'மணமகள் தேவை' விளம்பரத்தை அவன் கவனத்துக்கு அனுப்பற மாதிரி அனுப்பச்