கடிதம் வந்த விவரத்தைச் சொல்லி வேணுமாமாவிடமும் அதைப் படிக்கக் கொடுத்தார் சர்மா.
படித்து முடித்து விட்டுச் சிரித்துக் கொண்டே "காந்தர்வ விவாகம்னு ஒண்ணு நம்ம சாஸ்திரங்கள்ளேயே ஒப்புக் கொள்ளப்பட்டிருக்குன்னு உங்களுக்கே அழகா ஞாபகப்படுத்தியிருக்கானே பிள்ளையாண்டான்?" என்றார் வேணு மாமா.
சர்மா தயங்கித் தயங்கி சுரேஷ் மூலமாகப் பாரிஸிலேயே ரவியைச் சந்தித்து அவன் மனத்தை மாற்ற முயற்சி செய்ய இயலுமா என்ற தம் யோசனையை வேணு மாமாவிடமும் கூறினார்.
"அது சாத்தியம் இல்லை சர்மா...! அங்கே எல்லாம் ஒருத்தரோட தனி வாழ்க்கையிலே இன்னொருத்தர் தலையிடறதை அநாகரிகமா நெனைப்பா. சுரேஷ் அவனுக்குக் கலியாணமாகி ஒரு குழந்தையும் பொறந்தப்பறம் டெல்லியிலே பார்த்துண்டிருந்த வேலைலேருந்து அப்பிடியே யுனேஸ்கோவுக்கு செலக்ஷன் ஆகி நியூயார்க் போனான். அப்புறம் இப்போ பாரிஸ் வந்திருக்கான். இப்படி எல்லாம் இல்லாமே கட்டைப் பிரம்மச்சாரியா அங்கே போயிருந்தான்னா இன்னிக்கு நீர் இருக்கிற நிலைமையிலே நானும் இருக்க நேர்ந்திருக்கலாம். ஒரு பிரெஞ்சு மருமகளையோ, அமெரிக்க மருமகளையோ என் வீட்டுக்குள் வரவேற்கிற நெலைமையை நானே எதிர்த்தாலும் தவிர்க்க முடியாமல் போயிருந்திருக்கும்."
சர்மாவின் இதயத்தில் அந்தப் பிரச்சனை ஏற்படுத்தியிருக்கிற கனத்தைக் குறைத்து இலகுவாக்க விரும்பியவர் போல வேணுமாமா இப்படிக் கூறியிருந்தார். சர்மாவின் பயங்கள், தயக்கங்கள், தர்ம சங்கடங்கள் எல்லாம் வேணு மாமாவுக்குப் புரிந்தன. சர்மாவின் குடும்பம் பரம்பரையான வைதீகக் குடும்பம். சர்மாவோ சுபாவத்தில் நல்லவர் என்றாலும் கட்டுப்பட்டி. வெளி உலகை அதிகம் சுற்றிப் பார்த்திராதவர். சிறு வயதிலேயே வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றவர். பரம்பரை பரம்பரையாக வேதாத்யயனம் செய்த குடும்பத்தைச் சேர்ந்தவர். கிராமத்தின் மூன்று பெரிய தெருக்களையும் சேர்ந்த மற்றவர்களுக்குச் சாஸ்திர விஷயங்களிலோ சம்பிரதாய விஷயங்களிலோ யோசனை சொல்லி வழிகாட்டும் உயர் அந்தஸ்தை உடையதாயிருந்தது சர்மாவின் குடும்பம். வடக்குத் தெரு, நடுத்தெரு, தெற்குத்தெரு என்ற அக்கிரகாரத்தின் மூன்று தெருக்களிலும் உள்ளவர்கள் பெரும்பாலும் அத்வைத மடத்தின் வழிகளைப் பின்பற்றுகிறவர்கள். அத்வைத மடத்தின் சுவாமிகளால் சங்கரமங்கலத்திற்கும், அகஸ்திய நதிக்கரையிலிருந்த சுற்றுப்புற கிராமங்களுக்கும் ஸ்ரீ மடத்தின் பிரதிநிதியாக,