கேட்டார்.
"இவன் தான் காணாததைக் கண்ட மாதிரி அவமேலே பிரியம் வெச்சுட்டான். அவ குடும்பத்திலேயாவது இதை எல்லாம் கண்டிக்க மாட்டாளோ? அவ தகப்பன் யாரோ பெரிய கோடீசுவரப் பிரபூன்னு சொன்னேளே...?"
"அந்தத் தேசத்திலே அப்படிக் கண்டிக்கிற உரிமையெல்லாம் எடுத்துக்கமாட்டா மாமா. படிச்சு வயசு வந்த ஆண் பெண்களுக்கு அவா அவாளே தங்களோட வாழ்க்கைத் துணையைத் தேடிக்கிற உரிமை உண்டு. அப்பா அம்மா பார்த்து ஏற்பாடு பண்ற கல்யாணம்கிறது அங்கே எல்லாம் எப்பவாவது அபூர்வமாகத்தான் நடக்கும்..."
"பெரிய பணக்காரக் குடும்பத்துப் பொண்ணுன்னியே...? தன்னோட பொண்ணு அந்தஸ்துக்குக் குறையாத இடத்துக்குப் போய்ச் சேரணும்னாவது அப்பாவுக்கு அக்கறையோ கவலையோ இருக்காதா...?"
"நம்மூர்ப் பணக்காரா மாதிரி இருபத்து நாலுமணி நேரமும் தாங்க பணமுள்ளவா, தனி அந்தஸ்துள்ளவா, தனி ஜாதி, தனி ரகம்னே நினைச்சுண்டிருக்க அங்கே அவாளுக்கெல்லாம் தெரியாது. பணம்கிறதை ஒரு வசதியா நினைப்பாளே ஒழிய வரப்பிரசாதமா நினைச்சுக் கர்வம் பிடிச்சு அலைய மாட்டா. நீக்ரோவைக் காதலிச்சு வெற்றி கண்ட பணக்காரக் குடும்பத்து வெள்ளைப் பெண் உண்டு. அந்தக் காதல் பெற்றோர்களுக்கும் மக்களுக்கும் எந்த விரோதத்தையும் உண்டு பண்ணினதில்லை. இதிலே ஒளிவு மறைவுகள், இலை மறைவு, காய் மறைவு எதுவும் கிடையாது. 'இவனை நான் காதலிக்கிறேன்' என்று தன் தாய் தந்தையிடம் தன் காதலனை அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தும் துணிவும் நேர்மையும் ஒரு பெண்ணுக்கு அங்கே உண்டு. கமலியைப் பொறுத்த மட்டிலே இண்டியன் ஸ்ட்டீஸ் ஃபேகுல்டியில் ரவியிடம் 'இண்டாலஜி' படிக்க வந்த போது அவளாகவே விரும்பி ரவியால் வசீகரிக்கப்பட்டுத் தான் அவனைக் காதலிச்சிருக்கா... இதை அவளே எங்கிட்ட மனசு விட்டுச் சொன்னா மாமா..."
"இனிமே யாரைச் சொல்லி என்ன பிரயோஜனம் அம்மா...? நான் என் தலையிலேதான் செருப்பாலே அடிச்சுக்கணும். ரவியை நான் பிரான்சுக்கு உத்தியோகம் பார்க்கப் போகவே விட்டிருக்கப்படாது...."