நடந்துக்குங்கோ...உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியணும்ங்கிறதில்லே, நீங்க மகா வித்வான். பெரிய படிப்பாளி. ஞானஸ்தர்..."
"இதிலே எனக்கிருக்கிற தர்ம சங்கடங்கள் உங்களுக்கும் புரியணும். பல வகையிலே கிராமத்தாருக்கும் ஸ்ரீ மடத்துக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கேன் நான். எடுத்தேன் கவிழ்த்தேன்னு மத்தவாளை மாதிரி நான் எதையும் பண்ணிண்டு அப்புறம் ஊர்லே நிமிர்ந்து நடக்க முடியாது. ரவியைத் தவிர எனக்குக் கல்யாணத்துக்கு இன்னொரு பிள்ளையும், பொண்ணும் வேற இருக்காங்கறதை மறந்துடாதீங்கோ! இந்தக் கிராமமும் ஜனங்களும் எப்படிப்பட்டவான்னு உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியணும்கிறதில்லே. ஊருக்குப் பயன்படற ஒரு பொது நன்மையைச் செய்யணும்கிறபோது அதுக்காக ஒண்ணாச் சேர மாட்டா. ஊருக்குப் பயன்படாத ஒரு தனி மனுஷ விவகாரத்தைப் பெரிசு பண்ணி விரோதத்தை வளர்த்துக்கணும்னா அத்தனை பேரும் உடனே ஒண்ணாச் சேருவா. நல்லது உடனே புரியாது. கெட்டதை உடனே புரிஞ்சுப்பா. முக்கால்வாசி சமயங்கள்ளே நல்லதையே அவசரப்பட்டுக் கெட்டதாப் புரிஞ்சுண்டுடுவா. ரெண்டுங் கெட்டான் ஊர், ரெண்டுங்கெட்டான் மனுஷா..."
"நீங்க சொல்றது அத்தனையும் நியாயம் தான் சர்மா... ஆனா...உங்க பிள்ளை ரவியோட மனதை நீங்க புண்படுத்திடப் படாது. புஷ்பம் மாதிரி மனசு அவனுக்கு..."
சர்மா இதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. அவர் சற்று முன் திருப்பிக் கொடுத்ததும் உள்ளே கொண்டு போய் விடாமல் வசந்தி அங்கேயே வைத்திருந்த ஆல்பத்தைக் கையிலெடுத்து மீண்டும் அவரே பார்க்கத் தொடங்கினார். சர்மா கவனித்து விடாமல் வசந்தியும் அவள் அப்பாவும் ஒருவரை ஒருவர் குறிப்பாகப் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டார்கள். வசந்தி பழையபடி தன்னுடைய 'ரன்னிங் காமெண்ட்ரி'யைத் தொடர்ந்தாள்.
"இது ஜெனீவா லேக்-கரையிலே நின்னு மணிக்கணக்காப் பார்த்துண்டிருக்கலாம். எனக்கு இது ரொம்பப் பிடிச்ச இடம் மாமா!"
பெரியதாய்க் கிண்ணம் கிண்ணமாகப் பூத்திருந்த பூக்கள் நிறைந்த ஒரு பெரிய பூங்காவில் ரவியும் கமலியும் நிற்கிறாற்போல ஒரு படம் ஆல்பத்தில் வந்தது. சர்மா வினவினார்.
"இதென்ன பூம்மா? இத்தனை பெரிசா...இத்தனை அழகா...?"