"அது துலீப் பூன்னு ஹாலந்திலே ரொம்பப் பிரசித்தம் மாமா. 'துலீப் ஃபெஸ்டிவல்'னு அது நிறையப் பூக்கிற காலத்திலே அங்கே ஒரு விழாவே கொண்டாடுவா..."
ஆல்பத்தில் அடுத்தபடம் திரும்பியது.
"இதென்ன இடிஞ்ச மண்டபமா...? அரண்மனையா....?"
" 'அக்ரோ-போலிஸ்'னு கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸிலே இது பெரிய சரித்திரப் பிரசித்தி பெற்ற இடம் மாமா!"
"அப்போ அவனும், இவளுமா ஐரோப்பா பூராவும் சுத்தியாச்சுன்னு சொல்லு..."
"........"
"ரெண்டு பேரும் தனியாத்தானே இதெல்லாம் சுத்தியிருக்கா....? இல்லியா....?"
சர்மாவின் இந்தக் கேள்வி குழந்தைத் தனமானதா அல்லது உள்ளர்த்தம் வைத்துக் கேட்கப் படுகிறதா என்பதை வசந்தியாலும் வேணு மாமாவினாலும் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது. கொந்தளிப்பிலும் அலை மோதலிலும் படகு கவிழ்ந்து விடாமல் மெல்ல நடத்திச் செல்லும் தேர்ந்த படகோட்டியைப் போல் அந்த உரையாடலை அவர்கள் மேலே கொண்டு செல்ல வேண்டியதாயிருந்தது. மீண்டும் விசுவேசுவர சர்மா கோபித்துக் கொண்டு எழுந்திருந்து போய் விடாமல் அந்தப் பேச்சைச் சுமூகமாகக் கொண்டு செல்ல முயன்றார்கள் அவர்கள்.
எதிர்பாராத விதமாக மறுபடியும் சர்மாவே தாமாக ரவியைப் பற்றிய பேச்சுக்குத் திரும்பியது கண்டு அவர்கள் இருவருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் பேச்சு எப்படி எந்த சமயம் எதிர்பாராத கோணத்துக்குத் திரும்புமோ என்ற தயக்கமும் முன்னெச்சரிக்கையும், ஒரளவு பயமும் கூட இருந்தன. அதனால் சர்மாவின் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லாமலே தவிர்த்தார்கள் அவர்கள். ஆனால் பேச்சு மேலே வளர்ந்த விதத்தைப் பார்த்தால் அவர் அதைப் பற்றியே உரையாடலைத் தொடர விரும்புவதாகப்பட்டது. அவர்கள் இருவரையும் நோக்கி அவர்