நூத்துக்கு நூறு உண்மை சர்மா..." என்றார் வேணு மாமா.
இப்படி வேணுமாமாவும் கமலியைப் புகழ்ந்து பேசவே சர்மா யோசிக்கத் தொடங்கினார். முதலில் வேணுமாமாவின் பெண் வசந்தி அவளைப் புகழ்ந்து பேசியிருந்தாள். இப்போது வேணுமாமாவும் அந்தப் பிரெஞ்சு யுவதியைச் சிலாகித்துச் சொல்கிறார். ரவியையும் அந்தப் பிரெஞ்சு யுவதியையும் பிரித்து வைக்க முயலும் தன் திட்டத்துக்கு அப்பாவோ, பெண்ணோ பாரிஸில் யுனஸ்கோவில் இருக்கும் வேணுமாமாவின் பிள்ளையோ ஒத்துழைப்புத் தரமாட்டார்கள் என்பது சர்மாவுக்கு இப்போது குறிப்பாகவும், தெளிவாகவுமே புரிந்தது.
வேணுமாமா பேசியபோதே 'உங்க ரவியோட... இவ' என்று அவர் சொல்லிய வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்ததில் 'ரவியோட மனைவி' என்று முதலில் சொல்ல நினைத்துப் பின்பு அந்த ஒரு வார்த்தையை விழுங்கி விட்டு 'இவ' என்பதாக மழுப்பிக் கூறினாரோ என எண்ணினார் சர்மா. ஒரு வேளை ரவியும் கமலியும் காதலர்கள் என்ற நிலையையும் கடந்து அங்கெல்லாம் 'மோதிரம் மாற்றிக் கல்யாணம்' - என்று சொல்கிறார்களே, அப்படிக் கல்யாணமே செய்து கொண்டு விட்டார்களோ என்றும் சந்தேகமாயிருந்தது அவருக்கு.
வசந்தி அந்த அழகிய ஆல்பத்தைச் சர்மாவிடம் கொடுத்தாள். அவர் பிரித்த முதல் பக்கத்திலேயே வெண் பனி மூடிய மலைச்சரிவு ஒன்றில் ரவியும், அந்தப் பிரெஞ்சு யுவதியும் பனிச்சறுக்கு விளையாட்டு விளையாடும் போது எடுக்கப்பட்ட அழகிய வண்ணப் படம் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.
சர்மாவுக்கு அருகே நின்று அவர் ஆல்பத்தைப் பிரிப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த வசந்தி "இந்தப் படம் ரவியும் கமலியும் ஸ்விட்ஜர்லாந்துக்கு உல்லாசப் பிரயாணம் போயிருந்த போது எடுத்ததுன்னு சொன்னா-" என்று அவருக்கு விளக்கினாள்.
"சர்மா படத்தைப் பார்த்து வெறும் உல்லாசப் பிரியமும், விளையாட்டுப் புத்தியும் அசல் லௌகீக ஆசைகளும் மட்டுமே உள்ளவளா இருப்பா போலிருக்கேன்னு நினைச்சுடாதீரும். கமலியைப் போல புத்திசாலிப் பொண்ணை நீர் ஐரோப்பா முழுவதும் தேடினால்கூடக் கண்டுபிடிக்க முடியாது. பிரெஞ்சு தவிர ஜெர்மனும், இங்கிலீஷூம் அவளுக்குத் தெரியும். ரவிகிட்ட சமஸ்கிருதமும், தமிழும், இந்தியும் கத்துக்கறா..."