முந்திராதிகாரி பதவியில் இருந்து வருபவர் விசுவேசுவர சர்மா. ஸ்ரீ மடத்தின் ஏஜண்ட் என்ற இந்தக் கௌரவப் பதவியை ஏற்றிருந்ததனால் சங்கர மங்கலத்திலும் அக்கம் பக்கத்துக் கிராமங்களிலும் நல்லது கெட்டதுகளில் 'ஸ்ரீ மடம் சம்பாவனை' என்ற பெயரில் ஓதியிடப்படும் தொகையையும் மரியாதையையும் பெற்று வரும் அதிகாரம் சர்மாவுக்கு இருந்தது. பிரான்சில்-பாரிஸில் வேலை பார்க்கும் தன் மகன் செய்திருக்கும் காரியத்தால் இனி இந்த அந்தஸ்துக்களும், மரியாதைகளும் என்ன என்ன மாறுதல்களை அடையும் என்றெல்லாம் எண்ணியே சர்மா சலனம் அடைந்திருக்கிறார் என்பது வேணு மாமாவுக்கு இப்போது புரிந்தது.
"எப்படியாவது இதைத் தவிர்த்துடலாம்னு நினைச்சுத்தான் உங்ககிட்டவும், உங்க பொண்கிட்டவும், இப்போ பிரஸ்தாபிச்சதைத் தவிர வேற யாரிட்டவும் இந்த லெட்டரிலுள்ளதைப் பத்தியே நான் பிரஸ்தாபிக்கலே."
"தவிர்க்கறதுங்கிற எண்ணத்தையே நீங்க விட்டுடணும் மாமா! ரவியையும், கமலியையும் இனிமே நீங்க பிரிக்கிறது நடக்காத காரியம். நான் பாரிஸியே கமலிகிட்டேயிருந்து விடை பெற்றபோது, அவ ரொம்ப பிரியத்தோட எனக்கு ஒரு ஆல்பம் 'பிரஸண்ட்' பண்ணினா. நீங்க தப்பா நினைச்சுக்கலேன்னா உங்களுக்கு இப்போ அதைக் காண்பிக்கிறேன்."
மனத்தின் மேற்பரப்பில் மண்டிக்கிடந்த வித்தியாசங்களையும் வெறுப்புகளையும் மீறி மகனைக் கவர்ந்த அந்தப் பிரெஞ்சு யுவதியைப் படத்திலாவது பார்க்க வேண்டுமென்று சர்மாவுக்கும் ஆவலாகத்தான் இருந்தது. ஆனால், அந்த ஆவலை அவர் வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவர் தமது சம்மதத்தையும் தெரிவிக்காமல், சம்மதமின்மையையும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தார்.
"மாமாவுக்கு ஆல்பத்தைக் கொண்டு வந்து காண்பியேன். பார்க்கட்டும்" என்று தம் மகளிடம் சொல்லி விட்டு சர்மாவின் பக்கம் திரும்பி, "எவ்வளவு விகல்பமில்லாத மனசு இருந்தா இப்படித் தங்கள் படத்தை எல்லாம் ஒட்டின ஆல்பத்தை எங்க ஞாபகார்த்தமா வச்சிக்குங்கோ'ன்னு குடுக்கணும்கிறதை நினைச்சுப் பாருங்கோ சர்மா. பிரெஞ்சு ஜனங்களே நல்ல மாதிரி. அதுவும் ரவியோட...இவ இருக்காளே - அதான் - கமலி - அவ அற்புதமான பொண்ணு. இன்னிக்குப் பூராவும் அவளோட சிரிச்சுப் பேசிண்டிருக்கலாம்னு தோணும். இங்லீஷ்லே, 'பிரான்ஸ் இஸ் நாட் எ கண்ட்ரீ பட் ஆன் ஐடியா'ன்னு ஒரு வசனம் உண்டு. அது