உல்லாச நிகழ்காலத் திளைப்பு இன்றைய இளைஞர்களிடையே காணப்படுகிறது. அவர்கள் கடினமான உடலுழைப்புக்கும் இலாயக்கில்லாமல், நுணுக்கமான மூளை உழைப்புக்கும் இலாயக்கில்லாமல் ஏனோ தானோ என்று தயாராகிறார்கள். இது அபாயமானதுன்னு ஒவ்வொரு பிரசங்கத்திலேயும் அவன் திருப்பித் திருப்பிச் சொல்லுகிறான்."
"யாரு...? தெய்வசிகாமணி நாடார்தானே? அவருக்கும் உங்களுக்கும் ஒத்த அபிப்பிராயம் ஒண்ணு இருக்குங்கறதே ஆச்சர்யமான விஷயந்தான் சர்மா...!"
"அதென்னமோ ஆயிரம் அபிப்பிராய பேதம் இருந்தாலும் சில பொது அபிப்பிராயங்களாலே நாங்க இன்னும் சிநேகிதத்தோட தான் பழகறோம். இறைமுடிமணி யோக்கியன். நாணயஸ்தன். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவன். பரோபகாரி..."
"உம்மை மாதிரி ஒரு பரம ஆஸ்திகர் அவரை மாதிரி ஒரு தீவிர சுயமரியாதைக்காரரை இத்தனை தூரம் சிலாக்கியமாச் சொல்றதே பெரிய ஆச்சரியம்தான்....!"
"நாஸ்தீகாள் யோக்கியமுள்ளவாளாயிருக்கக் கூடாதா என்ன...?"
"சரி சரி! நீரும் வந்த காரியத்தை மறந்துட்டீர். நானும் பேசவேண்டிய விஷயத்தை மறந்துட்டேன். ஆஸ்தீக - நாஸ்தீகத் தர்க்கங்களை இன்னொரு நாள் வச்சுப்போமே...? இப்போ நாம பேச வேண்டியதைப் பேசலாம்."
சர்மா வேணு மாமாவுக்கு அருகே நெருங்கி வந்து குரலை முன்னினும் தணித்துக் கொண்டு பேசினார். "இந்தப் பிள்ளையாண்டான் பண்ணியிருக்கிற சுந்தர கோளத்திலே இனிமே என் பொண்ணுக்கு நல்ல இடத்துலே சம்பந்தம் கிடைக்குமோ கிடைக்காதோன்னு கூடப் பயமாயிருக்கு. குமாரைப் பொறுத்த மட்டுலே கவலையில்லை. அவன் ஆண்பிள்ளை. கொஞ்ச நாள் கல்யாணம் ஆகாமே இருந்தாக்கூடப் பெரிய பழி ஒண்ணும் வந்துடாது. தவிர அவனோட காலேஜ் படிப்பு முடியறத்துக்கு இன்னும் ரெண்டு மூன்று வருஷம் ஆகும். பொண் விஷயம் அப்பிடி இல்லே. ஒரு குடும்பத்திலே ஆண்கள் பண்ற ஒவ்வொரு தப்பும் அந்தக் குடும்பத்திலே கல்யாணத்துக்கு நிக்கிற பொண்களைன்னா பாதிக்கிறது?"
"திரும்பத் திரும்பப் பழைய ராமாயணத்துக்கே போறீரே...? ரவி என்னமோ பெரிய