எதிர்பார்க்கிறான்'னு... ஒரு வரி கொஞ்சம் தாராளமாக மனசுவிட்டு எழுதப்படாதா...?"
சர்மா பதில் சொல்லவில்லை.
"மாமாவைக் கஷ்டப்படுத்தாதீங்கோ அப்பா. எல்லாம் இவ்வளவு எழுதியிருக்கிறது போறும். சரியாத்தான் எழுதியிருக்கார்."
வேணு மாமாவிடமும் அவர் பெண் வசந்தியிடமும் சர்மா விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட போது "அப்போ அவா இங்கே தங்கற விஷயமா என்ன முடிவு பண்றேள்னு யோசனை பண்ணி அப்புறமாச் சொல்லுங்கோ" என்றார் வேணுமாமா.
"சொந்தக் கிராமத்திலே சொந்த அப்பா, அம்மா, தங்கை, தம்பியெல்லாம் இருக்கிற கிருஹத்திலே தங்க முடியாதபடி ஒருத்தன் வரான்னா - அவன் அப்புறம் எங்கே தங்கினாத்தான் என்ன...? இந்த ஊர்லே நீங்க சொல்ற மாதிரி பாத்ரூம் வசதி - தங்கற வசதியோட ஆத்தங்கரையிலே ஹைவேஸ் - பி.டபுள்யூ.டி. பங்களா, மலையடிவாரத்திலே ஃபாரஸ்ட் ரெஸ்ட் ஹவுஸ் எல்லாம் கூட இருக்கே...?"
வேணுமாமா இதைக் கேட்டு அயர்ந்தே போனார். ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும் மறுபுறம் மகன் மேல் சர்மாவுக்கிருந்த பாசம் புரியும் படி இந்த வாக்கியங்கள் ஒலித்தன. சொந்த மகன் தன்னோடு தங்க முடியாமல் போவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சர்மாவின் மனம் அப்போது தவிப்பது புலப்பட்டது.
சர்மா புறப்பட்டுப் போய் விட்டார்.
"என்னம்மா வசந்தி? திடீர்னு இப்படிப் பேசிட்டுப் போறார்...?"
"அவர் தப்பா ஒண்ணும் சொல்லலே அப்பா. பிள்ளை மேலே இருக்கிற பிரியத்தையும் விட முடியலே. அதே சமயம் ஊர் மெச்சற ஆசார அனுஷ்டானங்களைப் பத்தின பயமும் இருக்கு. இறுதலைக் கொள்ளி எறும்பு மாதிரி மாட்டிண்டு தவிக்கிறார்."