வசந்தி சாவிக் கொத்தைக் கொண்டு வந்து தன் தந்தையிடம் கொடுத்தாள். வெளி நாட்டில் உத்தியோகம் பார்க்கிற பிள்ளையிடமிருந்து கணிசமான தொகை மாதா மாதம் வருகிறது என்பதைத் தவிர வேணு மாமாவே நல்ல வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்குச் சுரேஷ் ஒரே பிள்ளை. வசந்தி ஒரே பெண். வசந்தியின் கணவருக்கு அதாவது வேணு மாமாவின் மாப்பிள்ளைக்குப் பம்பாயில் ஒரு பெரிய கம்பெனியில் சேல்ஸ் மானேஜர் உத்தியோகம். அந்தக் கம்பெனியின் தயாரிப்புகள் ஏற்றுமதியாகி விற்கிற இடம் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகள் என்பதால் கோடிக் கணக்கில் அந்நியச் செலாவணி ஈட்டும் அந்த வெளி நாட்டு வர்த்தகதை மேலும் பெருக்குவதற்கு அடிக்கடி அந்த நாடுகளுக்குப் பயணம் செய்பவர் அவர். அவர் மாதக்கணக்கில் வெளிநாடு போகும் சமயங்களில் வசந்தி அப்பாவோடு ஊரில் வந்து தங்குவது வழக்கம். கல்யாணம் ஆகிப் பல ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்குக் குழந்தை குட்டி இல்லை. பிள்ளை வந்தாலும் சரி மாப்பிள்ளை வந்தாலும் சரி கிராமத்து வீட்டில் அவர்கள் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நவீன வசதிகள் இருக்கட்டும் என்று மாடியில் குளியலறை இணைந்த அறைகளைக் கட்டியிருந்தார் வேணு மாமா. மாடியிலிருந்து வீட்டு முன்புறமும் பின்புறமும் இறங்குவதற்குத் தனித்தனிப் படிக்கட்டுகள் இருந்தன. மாடி முகப்பில் திறந்த வெளியில் குளிர்ச்சியாக இருக்கட்டும் என்று தொட்டியில் நிறையச் செடிகளும், கொடிகளும் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்து விட்டு சர்மா வேணுமாமாவிடம் சொன்னார்.
"உங்களுக்குச் சரி. இதெல்லாம் தேவைதான். பிள்ளை, மாப்பிள்ளை யாராவது மாத்தி மாத்தித் தங்க வந்திண்டிருப்பா. எனக்கு இதெல்லாம் எதுக்கு? ஒரு நாள் கூத்துக்குத் தலையைச் சிரைச்சிண்ட கதையா இப்போ ரவியும் அவனோட எவளோ ஒருத்தியும் வராங்கறதுக்காக நான் உடனே இதெல்லாம் பண்ணியாகணுமா...? எல்லாம் போறாதுன்னு நீங்க மேற்கே மலையிலே ஏலக்காய் எஸ்டேட் வேற வாங்கியிருக்கேள். அது சம்பந்தமாகவும் உங்ககிட்ட மனுஷாள் வரப்போக இருப்பா...லௌகிகம் அதிகம் உள்ளவாளுக்கு, உம்மைப் போல நாலு பேரோடப் பழகறவாளுக்கு - இது எல்லாம் பிரயோஜனப்படும்."
"ஓய் சர்மா...? இந்த மாதிரி சாமர்த்தியப் பேச்சு தானே வேண்டாம்கிறேன். எனக்கு இதெல்லாம் தேவைதானா இல்லையான்னு நீர் 'சர்டிபிகேட்' கொடுக்கறதுக்கு உம்மை நான் கூப்பிட்டுக் காமிக்கலே. நீர் என்ன செய்யணும்னு யோசனை சொன்னா அதை காதுலேயே வாங்கிக்காம வேற என்னென்னமோ பேசறீரே...?"