"பிரெஞ்சுக்காராளுக்குப் 'பிரைவஸி' ரொம்ப முக்கியம். மேல் நாட்டுக்காரர் எல்லோருமே பிரைவஸியைக் கவனிப்பான்னாலும் பிரெஞ்சுக்காரா ரொம்ப மென்மையான மனசுள்ளவா... இங்கிதம், நாசூக்கு இதெல்லாம் அதிகம். சங்கரமங்கலம் அக்ரகாரம் நடுத்தெருவிலே இருக்கிற உங்க பூர்வீக வீடோ ராணி மங்கம்மாள் காலத்துத் தர்ம சத்திரம் மாதிரி இருக்கு. கீழ் வீட்டில் ஒரே பெரிய கூடம். மச்சும் கூட ஒரு பெரிய ஹால் தான். பாத்ரூம்னு எதுவுமே இல்லே. கிணத்தடிதான் பாத்ரூம். நீரோ, மாமியோ கிணத்தடியிலே குளிக்கிற வழக்கமே இல்லே. சூரியோதயத்துக்கு முன்னாடியே அகஸ்திய நதிக்குப் போயிட்டு வந்துடறேள். இந்த ஊர்லே பிறந்து வளர்ந்த உம்ம பிள்ள ரவியே இப்போ வர்றப்பப் பாருமே, முன்னே மாதிரி இனிமேக் கிணத்தடியிலேயோ, ஆத்தங்கரையிலேயோ குளிக்க மாட்டான். பாத்ரூம்கிறது ஒரு தவிர்க்க முடியாத பழக்கமாகிப் போயிருக்கும் அவனுக்கு...!"
"அவாளுக்காக இனிமே நான் புதுசா ஒரு வீடே கட்டணும்கிறேளா...!"
"நான் அப்பிடிச் சொல்லலே. மாடியிலே ஒரு தனி ரூம் போடுங்கோ -அதை ஒட்டினாற்போல ஒரு அட்டாச்டு பாத்ரூமும் ஏற்பாடு பண்ணிடுங்கோ. இதை நீங்க கமலிக்காகப் பண்ணறதா நினைச்சுக்க வேண்டாம். உங்க பிள்ளையாண்டானே இப்போ இதை அவசியம்னு நினைப்பான். என் பிள்ளை சுரேஷ் ரெண்டு தரம் இங்கே வந்து ரெண்டு ரெண்டு நாள் தங்கினத்துக்காக, இந்த வீட்டையே நான் ரீமாடல் பண்ணினேன். சந்தேகமாயிருந்தா... என் பின்னாடி வாங்கோ காமிக்கிறேன்....!"
சர்மாவும் வேணு மாமாவும் உள்ளே சுற்றிப் பார்ப்பதற்குச் சென்ற போது பார்வதி எதிரே வந்தாள்.
"நான் ஆத்துக்குப் போறேன்ப்பா... நீங்க சீக்கிரம் வந்துடுங்கோ, பூமிநாதபுரம் மாமா வந்தா உட்காரச் சொல்கிறேன்" என்று சர்மாவிடம் சொல்லிவிட்டு, "நான் வரேன் மாமா" என்று வேணு மாமாவிடமும் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டாள் பார்வதி.
"இந்தா வசந்தி! மாடிச் சாவியை எடுத்துண்டு வா. மாமாவுக்கு மாடியைத் திறந்து காமிப்போம் பார்க்கட்டும்."