"பேனா இருந்தாக் குடும்மா! நான் கொண்டு வரலை-"
வேணுமாமா உடனே தம் சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்துச் சர்மாவிடம் கொடுத்தார்.
சர்மாவின் உள்ளடங்கிய ஆத்திரமும் கோபமும் அந்தக் கடிதத்தில் அவர் எழுதிய வாக்கியங்களிலேயே தெரிந்தன.
"சிரஞ்சீவி ரவிக்கு அநேக ஆசீர்வாதம். உபய க்ஷேமோபரி. உன் கடிதம் கிடைத்தது. விளம்பரத்தைக் கொடுக்கவில்லை. நிறுத்திவிட்டேன்.
"இங்கு உன் அம்மா, சௌ. பார்வதி, சிர. குமார் அனைவரும் சௌக்கியம். மற்ற விஷயங்களை நீ வரும் போது நேரில் பேசிக் கொள்கிறேன்" - என்று நாலைந்து வரிகளில் எழுதிக் கையெழுத்திட்டு வசந்தியிடம் கொடுத்தார் சர்மா.
வசந்தி அதை வாங்கிக் கொண்டு, "நீங்க இதிலே என்ன எழுதியிருக்கேள்? கோபமா ஒண்ணும் எழுதலியே...?" என்று அவரைக் கேட்டாள். அவரிடமிருந்து சிரித்தபடி பதில் வந்தது.
"முதல்லே நீ படிம்மா! அப்புறம் உங்கப்பாட்டக் கொடுத்து அவரையும் படிக்கச் சொல்லு! உங்களுக்கெல்லாம் தெரியக்கூடாத பெரிய ரகசியம் ஒண்ணும் அதிலே எழுதிடலே..."
"நான் படிக்கணும்கிறது இல்லே மாமா! நீங்க சொன்னாச் சரிதான்..."
"நீ படீம்மா... நானே சொல்றேனே... படீன்னு."
அவள் அதைப் படித்துவிட்டுத் தன் தந்தையிடம் கொடுத்தாள். அவரும் அதைப் படித்தார்.
"ஏன் ஓய்? இவ்வளவு செலவு பண்ணி ஒரு ஏர்மெயில் கடிதாசு போடறோம். அதிலே போயி இத்தனைக் கஞ்சத்தனமா நாலேநாலு வரிதானா எழுதணும். அத்தனை தூரத்திலே இருந்து புறப்பட்டு வரேன்'னு எழுதியிருக்கிற பிள்ளையாண்டானுக்கு, 'உன் வரவை ஆவலோடு