சர்மாவும் வேணு மாமாவும் இப்படிப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டபடி அருகில் நின்ற வசந்தி ஒரு யோசனை சொன்னாள்.
"மாமாவுக்கு ஒண்ணும் ஆட்சேபணையில்லேன்னாக் கமலியும், ரவியும் கொஞ்ச நாளைக்கி இங்கேயே தங்கிக்கலாம். நான் பம்பாய் திரும்பறத்துக்கும் ஒரு மாசம், ரெண்டு மாசம் ஆகும். அதுவரை கமலிக்கு நானே பேச்சுத் துணையா இருக்கலாம். உங்காத்திலே நீங்களும் வைதீகம், மாமியும் படு ஆசாரம். பார்க்கப் போனா மாமி உங்களை விடக் கடுமையான வைதீகம்னு சொல்லணும். அத்தனைக்கும் நடுவிலே வர்றவாளையும் சிரமப்படுத்திண்டு, நீங்களும் சிரமப்படறதைவிட சுலபமா அவாளை இங்கேயே தங்க வச்சுடலாம்."
இதற்கு சர்மா உடனே பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் வேணு மாமா இந்த அருமையான யோசனையைக் கூறியதற்காகத் தம் பொண்ணைப் பாராட்டினார்.
"நல்ல ஐடியா வசந்தி! இந்த யோசனை எனக்குத் தோணலியே...? பேஷான காரியம்! இங்கேயே அவாளை தங்க வச்சுண்டுடலாம். சர்மாவுக்கும் செலவு மிச்சம். இப்போ உடனே கட்டிட வேலை மர வேலைன்னு ஆளைத் தேடி அலையவும் வேண்டாம். என்ன சொல்றீர் சர்மா?..."
சர்மா பதில் எதுவும் சொல்லவில்லை. ஏதோ யோசனையில் மூழ்கினாற் போல் இருந்தார். அவர் உடனே அந்தப் பிரச்சினையை அப்படியே விட்டுவிட்டு வீட்டில் சுரேஷூக்குப் போடலாம் என்று எப்போதோ வாங்கி வைத்திருந்த ஓர் ஏரோகிராம் தாளை எடுத்து வந்து சர்மாவிடம் நீட்டினாள் வசந்தி.
"நீங்க இப்போ பூமிநாதபுரம் போகப் போறேள். நாளைக்குப் போஸ்ட் ஹாலிடே. ஏரோகிராம் வாங்கவோ எழுதிப் போஸ்ட் பண்ணவோ முடியாது. இப்பவே இரண்டு வரி எழுதிக் குடுத்துடுங்கோ மாமா! நானே அதைப் போஸ்ட் பண்ணிடறேன்."
அவள் குரல் அவரிடம் கெஞ்சாத குறையாக குழைந்தது. முதலில் அவர் தயங்குவதாகப் பட்டது. அப்புறம் வசந்தியின் முகதாட்சண்யத்துக்கு மனசு இளகினார் அவர்.