(Reading time: 14 - 28 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

"மரியாதையும், பயமும், பக்தியும் வெச்சுக்க நான் யாருடீ அவளுக்கு? இங்கே வந்து தங்கியிருக்கிறதாலே சொல்ல வேண்டியிருக்கு. மடத்து முத்திராதிகாரி வீட்டிலே உடம்பிலே துணியே இல்லாமே ஒரு வெள்ளைக்காரி வந்து தங்கியிருக்காளாம்னு ஊர்லே நாலு பேர் எங்களைப் பற்றிப் பேசாமப் பார்த்துக்கணுமோல்லியோ!"

  

"நான் அவகிட்டப் பக்குவமாச் சொல்லி வைக்கிறேன் மாமீ! இப்போ நீங்க கொஞ்சம் தயவு பண்ணி மாடிக்கு வரேளா...? அம்மானை..."

  

வசந்தி தன் வாக்கியத்தை முடிப்பதற்குள்ளேயே காமாட்சியம்மாளிடமிருந்து வெட்டினாற்போல் பதில் வந்தது.

  

"நான் மாடிக்கெல்லாம் வரலையடீம்மா! அவளுக்கு ஆத்திரம்னா அவளை இங்கே கூட்டிண்டு வா!... ஆடிக் காமிக்கிறேன்..."

  

"இதோ இப்பவே கூட்டிண்டு வரேன் மாமீ" என்று கூறிவிட்டு மறுபடியும் மாடிக்கு விரைந்தாள் வசந்தி. மாமி அதற்குச் சம்மதித்ததே ஒரு தேவதை வரம் கொடுத்தது போலிருந்தது.

  

காலையில் கமலியும், ரவியும் இரயில் நிலையத்திலிருந்து வந்தபோது காமாட்சியம்மாள் எவ்வளவு இறுக்கமாக இருந்தாளோ அவ்வளவு இறுக்கம் இப்போது இல்லையென்று தெரிந்தது. கமலி தங்களைக் கூப்பிட்டு அளித்த கைக்கடிகாரங்களைக் குமாரும் பார்வதியும் அம்மாவிடம் போய்க் காண்பித்துச் சொல்லியதாகவும், அம்மா அவை மிகவும் நன்றாயிருப்பதாகப் பாராட்டியதாகவும், பார்வதியே வசந்தியிடம் சொல்லியிருந்தாள். இப்படிச் செயல்களால் காமாட்சியம்மாளுக்கும் - கமலிக்கும் இடையில் சகஜமாகப் பழகும் ஒரு நிலையை உருவாக்க வேண்டுமென்றுதான் வசந்தி முயன்றாள். காமாட்சியம்மாளைப் பற்றிப் பெருமையாக நாலு வார்த்தை கமலியிடமும் கமலியைப் பற்றிப் பெருமையாக நாலு வார்த்தை காமாட்சியம்மாளிடமும் சொல்லுவதன் மூலம் இரு பக்கங்களிலும் மனங்களை இலகுவாக்க முயன்று கொண்டிருந்தாள் வசந்தி.

  

மாடிக்குப் போனதும் வசந்தி முதல் வேலையாகக் கமலி அணிந்திருந்த கையில்லாத 'ரவி'க்கைக் கழற்றி வேறு கையுள்ளதை அணிந்து கொள்ளச் செய்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.