"ஆமாம்! வாங்கோ சீமாவையர்வாள்!" என்று எழுந்து நின்று வரவேற்றார் சர்மா. ஆனால் வேணுமாமா எழுந்திருக்கவோ, வரவேற்கவோ, முகமன் வார்த்தைகள் கூறவோ செய்யாமல் வேறு திசையில் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முகம் வெறுப்பை உமிழ்ந்தது. சர்மா அந்த மனிதரை வரவேற்று எழுந்து மரியாதை செய்ததே வேணுமாமாவுக்கு அப்போது அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது.
"இல்லே... அவசரமாப் போயிண்டிருக்கேன். அப்படமா வந்து பார்க்கறேன்..." என்று வேணு மாமா சர்மாவோடு அமர்ந்திருப்பதைப் பார்த்தே ஒதுங்கினாற் போலத் தம்மைக் கத்தரித்துக் கொண்டு விலகிப் போய் விட்டார் சீமாவையர்.
"அயோக்கியன்! எந்த வயல் வரப்புச் சண்டைக்கு யாரைத் தூண்டிவிடப் போயிண்டிருக்கானோ?" என்று சர்மாவின் காதில் கேட்கும்படியாகவே முணுமுணுத்தார் வேணுமாமா. சர்மா இதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை.
தூக்கத்திலிருந்து ரவி எழுந்ததும் அவனையும் கமலியையும் இரவு டின்னருக்கு அழைத்துவிட்டு அது சம்பந்தமான ஏற்பாடுகளைக் கவனிக்க வேணுமாமாவோடு வசந்தியும் தங்கள் வீட்டுக்குப் புறப்பட்டாள்.
*****
இரவு விருந்துக்குப் பத்து இருபது முக்கியமாகவர்கள் வந்திருந்தார்கள். 'கமலி'தான் சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாக இருந்தாள். பெரும்பாலோர் எஸ்டேட் உரிமையாளர்கள்.
கமலிக்கு எதிரே டேபிளில் வந்தமர்ந்திருந்த வேணுமாமாவின் நண்பர் சாரங்கபாணி நாயுடுவை அவளுக்கு ரவி அறிமுகப்படுத்தி வைத்தவுடன் அவர் பட்டையாக நெற்றியில் அணிந்திருந்த நாமத்தைப் பார்த்து, இவர் வைஷ்ணவராக இருக்கக் கூடும் என்று கருதிக்கொண்டு 'அஷ்டாட்சர மந்திரம்' பற்றியும் இராமாநுஜர் பற்றியும் அவரிடம் ஏதோ கேட்டாள் கமலி.
நாயுடுவுக்கு அவளுக்குப் புரியும்படி அதை விளக்கிச் சொல்ல வராததால் பேச்சை மாற்றிப்