(Reading time: 14 - 28 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

"சுமாரான விஷயங்களைப் பிரமாதப்படுத்திச் சீர்திருத்தம் செய்யப் புறப்படுவதும், பிரமாதமான விஷயங்களைக் கவனிக்காமலே பாழடைய விட்டு விடுவதும் அரசியல் வாதிகளால் புதிதாக உங்கள் தேசத்துக்கு வழங்கப்படும் 'நியு ஸப்கல்சர்' ஆகி வருகிறது."

  

இந்த வார்த்தைகளைக் கேட்ட போது மிகப்பெரிய விஷயத்தை - முந்நூறு நானூறு பக்கங்களில் விமர்சித்து எழுத வேண்டிய ஒன்றைச் சுலபமாக ஒரே ஒரு வாக்கியத்தில் கமலி கச்சிதமாகச் சொல்லி முடித்து விட்டாற் போல் உணர்ந்தாள் வசந்தி. சுதந்திரத்துக்குப் பின் வந்திருக்கும் இந்தியாவை இந்த ஒரு வாக்கியம் அத்தனை பொருத்தமாக விமர்சித்தது. பித்தளை அம்மாவைப் பந்துக்கள் கழற்சிக்காய்கள், சோழிகள், பல்லாங்குழி, விளையாடப் பயன்படும் முருங்கை முத்துகள், மரத்தில் அழகாகச் செதுக்கப் பெற்ற பல்லாங்குழி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்து விவரம் விசாரித்துத் தெரிந்து கொண்டாள் கமலி.

  

அந்த வெள்ளை யுவதி தமிழ் பேசியது காமாட்சியம்மாளுக்குப் பெரிதும் ஆச்சரியமளித்தது. வாழ்நாளில் தன் குரலைத் தானே திரும்பிக் கேட்கும் வாய்ப்பு காமாட்சியம்மாளுக்கு இதுவரை வாய்த்ததே இல்லை. காமாட்சியம்மாளைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று கருதின வசந்தி கமலியிடம் ரிக்கார்டரை இயக்கி மாமியின் பதிவுசெய்த பாடலை அவளே திரும்பக் கேட்கும் விதத்தில் ஒலிக்கச் செய்யும்படி வேண்டினாள்.

  

"கவனமாக...ரெக்கார்டரிலே தோல் உறை மேலே போட்டிருக்கு...மாமி கிட்டக் கொண்டு போயிடாதே... தோல் மேலே பட்டுட்டா மாமி மறுபடியும் ஸ்நானம் பண்ணப் போயிடுவா..." என்று வசந்தி கமலியின் காதருகே மெல்லிய குரலில் எச்சரிக்கவும் செய்தாள்.

  

தான் சற்று முன் பாடியதெல்லாம் காஸெட் ரெக்கார்டரிலிருந்து திரும்ப ஒலிக்கவே மாமி சிறிது நாணினாற்போல் உட்கார்ந்து தன் குரலையே கேட்டுக் கொண்டிருந்தாள். பெரு மதிப்புக்குரிய ஒரு குருவுக்கு முன்னால் அமர்ந்திருக்கும் மாணவி போல் பவ்யமாக விலகியிருந்து, மரியாதையோடு மாமியின் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தாள் கமலி. 'பருகுவது போன்ற ஆர்வம்' என்பார்களே அந்த ஆர்வம் கமலியின் பார்வையில் அப்போது தெரிந்தது.

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.