"கமலீ! நாம் கீழேயே போயிடலாம்! மாமி நம்மை அங்கே வரசொல்றா.... ஷீ... இஸ் ஏ ஸ்டாஞ்ச் டிரடிஷனலிஸ்ட்...."
"பீயிங் டிரடிஷனலிஸ்ட் இஸ் நாட் அட் ஆல் எ கிரைம்... வசந்தீ! போகலாம் வா" என்று காமிராவையும் பைண்டு பண்ணின புத்தகம் போலக் கையடக்கமாக இருந்த ரேடியோ கம் காஸெட் ரெக்கார்டரையும் எடுத்துக் கொண்டு கீழே புறப்பட்டாள் கமலி.
இந்தியத் தன்மை, இந்தியப் பழக்க வழக்கங்கள், ஆசார அநுஷ்டானங்கள் எதைப் பற்றியும் சிறிது கூச்சப் பட்டாற் போலவும் மன்னிப்பு கேட்பது போன்றும் எப்போது தான் பேசினாலும் அதை விரும்பாமலும் ஏற்றுக் கொள்ளாமலும் கமலியிடமிருந்து ஒரு பதில் வருவதை வசந்தி கவனித்திருந்தாள். இந்தியத் தன்மை, பழக்க வழக்கங்களுக்கு ஏற்பத் தன்னை இசைவாக மாற்றிக் கொண்டு விட்டுக் கொடுக்க அவள் தயாராயிருந்தாளே ஒழியத் தனக்காக அவையெல்லாம் விட்டுக் கொடுத்து விலக வேண்டும் என்று அவள் ஒரு போதும் எண்ணியதாகவோ எதிர்பார்ப்பதாகவோ தெரியவில்லை. பிறருடைய நாகரிகத்தையும், பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் மதிக்கின்ற கமலியின் இந்த இயல்பை வசந்தி வியந்தாள். அசல் கல்வியறிவின் கனிவு மனத்தில் வந்திருந்தால் ஒழிய இப்படிப் பக்குவம் ஏற்பட்டிருக்க முடியாது என்பதை அவள் உணர்ந்தாள். பிறருடைய தனிப்பட்ட பழக்க வழக்கங்கள், நடை, உடை, பாவனைகள், நாகரிகம், கலாச்சாரம் முதலியவற்றைச் சகித்துக் கொள்ளவும் ஏற்கவும் உயர்ந்த பட்சமாக மனம் பக்குவப்பட்டாலொழிய முடியாது. கலிசுரல் - ஈகோ அதாவது கலாசார ஆணவம் - காரணமாகவே உலகெங்கும் இனங்களுக்கிடையே, பிரதேசங்களுக்கிடையே மொழிகளுக்கிடையே, நாடுகளுக்கிடையே மனிதர்கள் போரிட்டுக் கொண்டிருக்கும் நிலைகளையும் நினைத்துப் பிறருடைய கலாசாரத்தை அதிக பட்சமாக மதிப்பது தான் அதை வெல்லும் மிகச் சிறந்த வழி என்பதைப் புரிந்து கொண்டிருக்கும் கமலியின் மென்மை - இங்கிதம் - இயைபு - யாவும் வசந்தியைச் சிந்திக்க வைத்தன. மெய்யான கல்வி அல்லது மனப்பக்குவம், ஓர் அழகிய பெண்ணை இரட்டை மடங்கு மேலும் அழகியாக்கி விடுவதை உணர்ந்தாள் வசந்தி.
அம்மானைக் காய்களையும் எடுத்துக் கொண்டு கமலியும், வசந்தியும் கீழே வந்த போது நேரம் நடு பகலுக்கு மேல் ஆகியிருந்தது. அம்மாவின் பாட்டு அம்மானை விளையாட்டு எதுவும்