வேணு மாமாவும் வசந்தியும் எத்தனை சுபாவமாக ரவி கமலி உறவு பற்றிய உரையாடலைப் பரிமாறிக் கொண்டார்களோ அத்தனை சகஜமாகவோ சுபாவமாகவோ சர்மாவால் அதைப் பற்றிப் பேசவோ நினைக்கவோ முடியவில்லை. உண்மையில் அதைப் பற்றிக் கவலையும், பயமும் எண்ணற்ற தயக்கங்களும் அவருக்கு இருந்தன.
அன்று இரவு ரவியையும், கமலியையும் தம் வீட்டில் டின்னருக்கு அழைத்தார் வேணு மாமா.
"நீரும் வரலாமே...? வந்தால் என்ன?" என்று வேணு மாமா சர்மாவை அழைத்தபோது அவர் வருவார் என்பதை நம்பி அழைப்பதாகத் தோன்றவில்லை. வரமாட்டார் என்ற முடிவுடன் ஒப்புக்கு அழைத்ததாகவே தோன்றியது.
"உமக்கென்ன? எஸ்டேட் ஒனர். உங்க சிநேகிதாள் எல்லாரையும் கூப்பிடுவேள். 'காஸ்மாபாலிடனா' இருக்கும். நான் வைதீகன். எனக்கு ஒத்துக்காது! என்னை விட்டுடுங்கோ... ரவியையும் கமலியையும் நீங்க கூப்பிடறது தான் முறை. அவாதானே இப்போ ஊர்லேருந்து வந்திருக்கா... வேணும்னா எங்காத்துப் பிரதிநிதிகளாகப் பாருவையும் குமாரையும் அவா கூட அனுப்பி வைக்கிறேன்" என்று பதில் வந்தது சர்மாவிடமிருந்து.
ரவி மாடியில் தூங்கிக் கொண்டிருந்ததால் அவன் எழுந்திருந்ததும் சொல்லி அழைத்து விட்டுப் போகலாம் என்று ரவிக்காகக் காத்திருந்தார் வேணுமாமா.
அப்போது தெருவில் மிராசுதார்களுக்கே உரிய மிடுக்கு நடையும் வலது கையில் வெள்ளிப் பூண் பிடித்த வாக்கிங் ஸ்டிக்கும் வாயில் புகையிலைச் சாறுமாக நாலு விவசாயிகள் பயபக்தியோடு கைகட்டி வாய் புதைத்துப் பின் தொடர நடந்து வந்து கொண்டிருந்தார் ஒரு கட்டுக் குடுமிக்கார மனிதர். சரிகைக்கரை வேஷ்டி, மார்பு மறைய போர்த்தியிருந்த மேல் துண்டிலும் சரிகைக்கரை மின்னியது. நெற்றியில் சந்தனப் பொட்டுப் பளபளத்தது.
"என்ன ஓய் சர்மா. உம்ம பிள்ளை ஊர்லேருந்து வண்டிருக்கானாமே?"
புகையிலைச் சாற்றைக் கடைவாயில் ஒதுக்கியதில் பேச்சு வார்த்தை குழறியது.