தெரு வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. அதை அடுத்து வேணுமாமாவின் குரலும் திண்ணையிலேயே 'சிரம பரிகாரம்' பண்ணிக் கொண்டிருந்த விசுவேசுவர சர்மா அவரை வரவேற்கும் குரலும் உள்ளே தெளிவாகக் கேட்டன.
"அப்பா பக்கத்து கிராமத்திலே ஒரு கலியாணத்துக்குப் போயிருந்தார், இப்பத்தான் திரும்ப முடிஞ்சது போலிருக்கு" என்று கூறியபடியே வாயிற் பக்கமாக எழுந்து போனாள் வசந்தி.
"என்ன வசந்தீ? எக்ஸ்டேர்னல் அஃபயர்ஸ், இண்டேர்னல் அஃபயர்ஸ் எல்லாம் எப்படி இருக்கு? ரிலேஷன்ஸ் 'இம்ப்ரூவ்' ஆறதா இல்லியா?"
அப்பா தன்னிடம் என்ன கேட்கிறார் என்று வசந்தி உடனே புரிந்து கொண்டு விட்டாள்.
"'கல்சுரல் எக்ஸ்சேஞ்ஜ் புரோகிராம்' மட்டும் சரியா நடந்துண்டிருக்குப்பா! மாமி அம்மானைப் பாட்டுப் பாடி கமலி அதை 'ரெக்கார்டு' பண்ணி மாமிக்கே திருப்பிப் போட்டுக் காமிச்சிண்டிருக்கா. வெளி தேசத்திலிருந்து வந்தவள் இதையெல்லாம் ஆர்வமாகக் கேட்கிறாளேங்கிற வரை மாமிக்கும் பிரியமாகத் தான் இருக்கு - ஆனா..."
"ஆனா...என்ன...?"
"ரவிக்கும் கமலிக்கும் இருக்கிற நெருக்கத்தை பத்திச் சொன்னா அதை மாமியலே ஜீரணிச்சுக்க முடியுமான்னுதான் தெரியலே..."
"உறவுகளுக்கு முதல் படியா இரண்டு தரப்பிலேயும் நம்பிக்கையை வளர்க்கணும். அது தான் 'டிப்ளமஸி' வசந்தி!" என்று புன்முறுவலோடு சொன்னார் வேணு மாமா.
"ரொம்ப அவசரப்பட்டு எந்த விஷயத்தையும் நேருக்கு நேராகச் சொல்லிக் காரியத்தைக் கெடுத்துடாதே அம்மா! காமு அவ ஏற்கனவே நெனச்சுண்டிருக்கிற படியே கொஞ்ச நாளைக்கு நெனைச்சுண்டிருக்கட்டும். உடனடியா ஆத்திலே ஒரு கலகம் வேண்டாம். விஷயத்தை அவளே மெல்ல மெல்லப் புரிஞ்சுக்க விடு! புரியறதுலே எத்தனைக்கெத்தனைத் தாமசமாறதோ அத்தனைக்கத்தனை நாம் கொஞ்ச நாள் நிம்மதியாயிருக்கலாம்" என்றார் சர்மா.