6. நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும்மாலை மங்கை மணாளனை (நெ).
7. தேடிக்கண்டு கொண்டேன் திருமாலொடு நான் முகனுந்
தேடித் தேடொனாத் தேவனை யென்னுள்ளே (தே)
நான் சந்நியாசியான பிறகு என் மனக் கவலை எவ்வளவு குறைந்து விட்டது! தெரியாமலா யாரும் இந்த நிலைமையைப் புகழுகிறார்கள். புதியதாய்க் காவியில் நனைந்த இந்த வஸ்திரம் மிக பளுவாக இருக்கிறது. இந்தச் சோலையில் ஒரு நீரோடை இருக்கிறது. அதில் இதை நனைத்துக் கசக்கிவிட்டால் பிறகு இலேசாக இருக்கும். இந்தச் சோலை மனத்திற்கு எவ்வளவு இரமணியமாக இருக்கிறது. ஆகையினாலே தான் இராஜாவின் மைத்துனன் வீரசேனன் இதிலேயே எப்பொழுதும் குடியாக இருக்கிறான். அவனுக்குச் சந்நியாசி என்றால் மிகவும் கோபம் உண்டாவது வழக்கம்; உடனே கத்தியால் அவனுடைய மூக்கை அறுத்து விடுவான். நான் நீரோடையில் வஸ்திரத்தை கசக்கிக் கொண்டு அவன் கண்ணில் படாமல் அப்பால் போய் விடுகிறேன். (சற்று துரம் போகிறான்)
(விரசேனன் உருவிய வாளுடன், தன் தோழன் சேவகன் முதலியோருடன் வருகிறான்)
வீர : (மகிபாலனை நோக்கி) அடேதுஷ்டா நில்லடா! எங்கே போகிறாய்? இதை விட்டு நகர்ந்தால் முள்ளங்கியின் இலையை ஒடிப்பதைப் போல, உன் தலையை முறித்து எறிவேன்.
தோழன் : வேண்டாம்; வேண்டாம். சந்நியாசியை வருத்துவது பெருத்த பாவம். இருக்க இடம் அற்றவர்களுக்கு நிழலைத் தர மரங்களையும், இங்கு வருபவர்களுக்கு இன்பந்தர வேண்டும் என்னும் எண்ணத்துடன் இந்தச் சோலையையும் ஏற்படுத்திய நீங்கள் இப்படிச் செய்வது அடாது. வேண்டாம், ஏழையை ஏன் ஹிம்சிக்க வேண்டும். பாவம்.
மகி : ஐயா! இந்த நகரத்திற்கே நீர் இரக்ஷகன். யாதொரு புகழும் இல்லாத இந்த ஏழைச் சந்நியாசியின் பேரில் கோபிக்க வேண்டாம்.