வஸ : ஐயா! என்னைப் பற்றி அப்படி நினைக்க வேண் டாம். என் தாய் மூலமாக இவர் எவ்வளவோ ஐசுவரியத்தைத் தருவதாய்ச் சொல்லி அனுப்பி எவ்வளவோ முயன்றும் அதற்கு நான் சிறிதும் இணங்கவில்லை. வண்டி தவறி இதில் ஏறி விட்டேன் போல் இருக்கிறது! அதனால் இந்தப் பெரும் பிழை நேர்ந்தது. நீர்தான் இந்த சமயத்தில் எனக்கு உதவி செய்து என்னைக் காப்பாற்ற வேண்டும். ஐயா! உமக்கு அநேக கோடி நமஸ்காரம். மிகவும் புண்ணியமுண்டு.
தோழ : பயப்பட வேண்டாம்; நான் பார்த்துக் கொள்ளுகிறேன். ஒரு நொடியில் இந்த மடையனை நான் ஏமாற்றி விடுகிறேன், (வீரசேனனிடம் வந்து) ஆம்! இதில் உண்மையில் ஒரு பெரும் பேய் தானிருக்கிறது! அப்பாடா! எவ்வளவு பயங்கரமாய் இருக்கிறது!
வீர : இருக்கட்டும். அது பேயாய் இருந்தால் உன்னை விழுங்காமல் எப்படி விட்டது?
தோழ : உங்களை விட்ட மாதிரி என்னையும் விட்டது. அது எப்படியாவது போகட்டும். இங்கே இருந்து நம்முடைய அரண்மனை வரையில் இரு பக்கங்களிலும் குளிர்ந்த நிழலைத் தரும் மரங்களைக் கொண்ட பாட்டை இருக்கிறது; நாம் சுகமாக நடந்து போகலாம் வாருங்கள்.
வீர : ஏன் நடக்க வேண்டும்.
தோழ : நடந்தால் நமக்கும் தேக ஆரோக்கியம்; களைத்துப் போன எருதுகளுக்கும் ஒருவித ஆறுதல்.
வீர : ஆனால் அப்படியே செய்வோம்! பத்மநாபா வண்டியைப் பின்னால் ஓட்டிக் கொண்டு வா! (சற்று நடக்கிறான்) சே! நில்! நான் ஒரு நாளும் நடந்ததே கிடையாதே. இன்று ஏன் நடப்பேன்? நான் யார் தெரியுமா? நான் இராஜாவின் மைத்துனன் அல்லவா? ஏழையைப் போல நான் பாட்டையின் வழியாக நடப்பதா? சீ! அது அவமானம். ஜனங்கள் என்னைப் பற்றி என்ன சொல்லிக் கொள்வார்கள். நான் வண்டியிலே தான் வர வேண்டும்.
தோழ : (தனக்குள்) இந்த ஆபத்துக்கு என்ன செய்கிறது; மார்க்கம் ஒன்றும்