ஜெடாயு பலியின் மனைவியினுடைய தலை மயிரைப் பிடித்திழுத்ததைப் போல இதோ உன்னை வெளியில் இழுத்து விடுகிறேன் பார்!
தோழ : பிரபு! பொறுத்துக் கொள்ள வேண்டும். கூந்தலில் கையை வைக்க வேண்டாம். மரத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் புஷ்பக் கொடியை யாராவது பிடித்திழுத்து அறுப்பார்களா? இவளை விட்டு விடுங்கள்; நான் கீழே இறக்கி விடுகிறேன். இவள் தேவையான இடத்திற்குப் போகட்டும். நாம் வண்டியில் ஏறிக் கொண்டு அரண்மனைக்குப் போவோம். (அவளைக் கீழே இறக்கி விடுகிறான்)
வீர : (தனக்குள்) ஆகா! இவள் என்னிடம் எவ்வளவு அவமதிப்பாய்ப் பேசுகிறாள். இவள் பேரில் என் மனதில் எழுந்து பொங்கும் கோபத்தை எப்படி அடக்குவேன்? அவளுக்கு ஒரு அடியாவது, குத்தாவது, உதையாவது கொடுக்காவிட்டால் என் கோபம் கொஞ்சமும் தணியாது. இவள் உயிரை வாங்க வேண் டும். அடே நண்பா! இவளை உடனே கொன்று விட்டு மறு வேலை பார்.
தோழ : (காதை மூடிக் கொண்டு) ஆகா! நன்றாய்ச் சொன்னீர்கள் இந்த மங்களபுரிக்கே பெருமையாய் விளங்கி ஒப்பற்ற அழகு, நற்குண நல்லொழுக்கம் முதலியவற்றைக் கொண்டுள்ளவளும் யாதொரு குற்றமும் செய்யாதவளுமான இந்த யெளவன மங்கையையா கொல்லுவது? இருந்திருந்து ஸ்திரீ ஹத்தியா செய்ய வேண்டும்! இதனால் ஆயுட்கால முழுவதும் நான் அனுபவிக்க வேண்டிய மனோ வேதனையையும், இதனால் உண்டாகும் பாபமுமாகிய பெரிய சமுத்திரத்தையும் எப்படிக் கடப்பேன்?
வீர : பயப்படாதே! உனக்கு நான் ஒரு தெப்பம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்கிறேன். சீக்கிரம் ஆகட்டும்; தனிமையாக இந்த இடத்தில் உன்னை யார் பார்க்கப் போகிறார்கள்.
தோழ : பிரம்மனுடைய சிருஷ்டிப் பொருள்கள் யாவும், அவற்றிற்கு மத்தியில் உள்ள இடைவெளியும், இந்த வனத்தில் உள்ள தேவதைகளும், சூரியனும், பஞ்சபூதங்களும், நமது மனமும், எங்கும் நிறைந்த கடவுளும் நாம் செய்யுங் காரியத்திற்குச் சாட்சியல்லவோ? இவைகளுக்குத் தெரியாமல் நாம் இந்தக் காரியத்தை எப்படிச் செய்ய முடியும்?