வீர: அப்படியானால் இவள் பேரில் ஒரு துணியைப் போட்டு மறைத்து விடுகிறேன். பிறகு வேலையை முடித்து விடு. இவளை ஒருவரும் பார்க்க முடியாது.
தோழ : இது பைத்தியந்தான்.
வீர : நீ ஒரு முட்டாள்! உனக்கொன்றும் தெரியாது. நீ போ அப்பால். பத்மநாபனைச் செய்யச் சொல்லுகிறேன். அடே பத்மநாபா எங்கே ஆகட்டும். உனக்குத் தங்கக் காப்பு இனாம் தருகிறேன்.
பத்ம : மகாப் பிரபு! சந்தோஷம்; கொடுங்கள் கையில் அணிந்து கொள்ளுகிறேன். -
வீர : தவிர, உனக்கு இன்று என்னுடன் முதல் தரமாக போஜனம் அளிக்கிறேன்.
பத்ம : வஞ்சனை இல்லாமல் வயிறு நிறைய போஜனம் செய்கிறேன். அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
வீர : உன்னை வேலைக்காரர்களுக்கு எல்லாம் எஜமானன் ஆக்குவேன்.
பத்ம : அப்படியானால் தங்கள் தயவினால் நான் பெரிய மனிஷ்யனாகிறேன்.
வீர : நான் சொல்வதைச் செய்ய வேண்டும்.
பத்ம : தடை என்ன! சொல்லுங்கள் அவசியம் செய்கிறேன்.
வீர : இந்த வஸந்தஸேனையை உடனே கொன்று விடு.
பத்ம : மகாப் பிரபு! இதுதானா ஒரு பிரமாதம். இதைத் தவிர நீங்கள் எந்தக் காரியம் செய்யச் சொன்ன போதிலும் நான் செய்யாமல் இருப்பேனோ? அப்படி இருந்தால் என்னைக் காட்டிலும் நன்றி கெட்டவன் யார்?